India

“போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் கொடுத்த சுகாதார ஊழியர்கள்” : மகாராஷ்டிராவில் நடந்த அவலம் !

நாடு முழுவதும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் கடந்த 31ம் தேதி நடைபெற்றது. இளம்பிள்ளை வாதம் ஏற்படாமல் பாதுகாக்கும் நோக்கில், இந்தியாவில் 1978-ம் ஆண்டு முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இந்நிலையில், 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக தவறுதலாக சுகாதார ஊழியர்கள் சானிடைசர் கொடுத்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் யாவத்மால் மாவட்டத்தில், உள்ள ஒரு கிராமத்தில், 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்குப் பதில், கவனக்குறைவாக சுகாதார ஊழியர்கள் கிருமி நாசினியைக் கொடுத்துள்ளனர்.

இதில், ஒரு குழந்தை வாந்தி எடுக்கவே அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளன. பின்னர் அங்கு குழந்தைக்கு நடத்திய மருத்துவ பரிசோதனையின்போது, கிருமி நாசினி வழங்கப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் கொடுத்த சுகாதார ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

குழந்தைகளுக்கு வழங்கும் போலியோ சொட்டு மருந்து விவகாரத்தில், சுகாதார ஊழியர்கள் அலட்சியமாக நடந்துக்கொண்ட சம்பவம் அம்மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: #LIVE #TNASSEMBLY | சட்டப்பேரவை கூட்டத்திலிருந்து தி.மு.க வெளிநடப்பு!