India

“சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்ட கொரோனா தடுப்பூசி” : பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் அவலம்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதாக கூறப்படும் அதேவேளையில், உருமாறிய கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிக்கு சுகாதாரத்துறை தயாராகி வருகிறது. மேலும் இதற்காக பணியின் போது எந்த பிரச்சினையும் இன்றி நேர்த்தியாக செய்து முடிப்பதற்காக நேற்று முன்தினம் நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆனாலும் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பு மருந்துகள் கொண்டுசெல்வதில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். அந்தவகையில், பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் கொரோனா தடுப்பு மருந்துகளை சைக்கிளில் கொண்டு செல்லும் அவலம் அரங்கேறியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் அமைந்துள்ள சவுகாகத் பெண்கள் மருத்துவமனைக்கு அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் கொரோனா தடுப்பூசியை சைக்கிளில் கொண்டுச் சென்றுள்ளார்.

எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி கொரோனா தடுப்பூசியை சைக்கிளில் கொண்டு சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரதமர் மோடியின் தொகுதியிலேயே சைக்கிளில் கொரோனா தடுப்பூசியைக் கொண்டுச் சென்றதால், மருந்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து சவுகாகத் பெண்கள் மருத்துவமனை டீன் கூறுகையில், தடுப்பூசி பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வேனில் 5 மையங்களுக்கு கொண்டுச் செல்லப்பட்டது. ஆனால் எதிர்பாராத அவசர நிலை காரணமாக மகளிர் மருத்துவமனைக்கு மட்டுமே தடுப்பூசி சைக்கிளில் கொண்டு வரப்பட்டது. தடுப்பூசி கொண்டுவரும் போது, பாதுகாப்பிற்கு காவல்துறையினர் நிறுத்தப்பட்டனர்” எனத் தெரிவித்தார்.

Also Read: ரூ.56,000 கோடி மதிப்பிலான நிறுவனத்தை ரூ.720 கோடிக்கு விற்கத் துடிக்கும் மோடி அரசு - தனியார்மயமாகும் BEML!