India

மேயரை அடுத்து ஊராட்சித் தலைவர் பதவிக்கும் 21 வயது இளம் பெண் தேர்வு.. அசத்தும் கேரள கம்யூனிஸ்ட் அரசு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவனந்தபுரத்தில் போட்டியிட்ட 21 வயதான இளம்பெண், மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவிலேயே இளம் மேயர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பெருநகர் மாநகராட்சியில் முடவன்முகல் பகுதியில் வார்டு உறுப்பினராக போட்டியிட்டவர் ஆர்யா ராஜேந்திரன். இவர் திருவனந்தபுரம் ஆல் ஜெயிண்ட் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் படித்துக்கொண்டே இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராகவும், பாலர் சங்கத்தின் மாநில தலைவராகவும் இருந்து வந்துள்ளார்.

பா.ஜ.கவை எதிர்த்து போட்டியிட்ட ஆர்யா பெருவாரியான வாக்கு வித்தியாத்தில் வெற்றி பெற்று கவுன்சிலராக பதவி ஏற்கவுள்ளார். 21 வயதே நிரம்பிய ஆர்யாவை திருவனந்தபுரம் பெருநகர மாநகராட்சியின் புதிய மேயராக அறிவித்துள்ளது இடது ஜனநாயக முன்னணி. இதன் மூலம் நாட்டிலேயே இளம் மேயர் என்ற பெருமையை ஆர்யா ராஜேந்திரன் பெற்றுள்ளார்.

Also Read: "மாற்றத்திற்கு வித்திடுவதில் தி.மு.கவே தொடக்கப்புள்ளி": திருநங்கை ரியா வெற்றி குறித்து கனிமொழி பெருமிதம்!

இந்நிலையில், பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு உட்பட்ட அருவாப்புலம் ஊராட்சியில் 21 வயதான இளம்பெண்ணான ரேஷ்மாவை ஊராட்சித் தலைவராக பதவியேற்க செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். அருவாப்புலம் ஊராட்சியின் 11வது வார்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேஷ்மா கடந்த ஆண்டு இளங்கலை முடித்துள்ளார்.

தொடர்ந்து மேற்படிப்புக்காக தயாராகி வரும் நிலையில், அவரை அவர் சார்ந்த மார்க்சிஸ்ட் கட்சி அருவாப்புலம் ஊராட்சி தலைவராக பதவியேற்க செய்ய திட்டமிட்டுள்ளது. ரேஷ்மா தற்போது மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ் எஸ் ஐ மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் டி ஒய் எப்ஐ எனும் வாலிபர் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.

வழக்கமாக ஊராட்சி , மாநகராட்சிகளில் மிக முக்கிய பதவிகளுக்கு முதிர்ந்த நபர்களையே கடந்த காலங்களில் முன்னிறுத்தி வந்த நிலையில், தற்போது இளைய தலைமுறையினரை மிக முக்கிய பொறுப்புகளில் அமர்த்தியுள்ளது அம்மாநில மக்களிடையே நெகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: “திருவனந்தபுரம் மேயராகும் 21 வயதான மாணவி” : இந்தியாவின் இளம் மேயரை தேர்வு செய்த சி.பி.ஐ.எம்!