India

“பி.எம் கிசான் திட்டத்தில் முறைகேடு” : தமிழகத்தை தொடர்ந்து பா.ஜ.க ஆளும் இமாச்சலில் ரூ.12 கோடி நிதி மோசடி!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (Pradhan Mantri Kisan Sammann Nidhi) திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

இந்த நிதி உதவி திட்டத்தில் தமிழகத்தில் கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் கிளம்பியது. அதன்படி தமிழகத்தில் மட்டும் ரூ. 110 கோடி அளவில் முறைகேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், முறைகேட்டில் ஈடுபட்ட 101 பேரை சிபிசிஐடி போலிஸார் கைது செய்துள்ளனர். அதேபோல் 100 அதிகாரிகள் வரை சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும் போலிஸார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டைத் தொடர்ந்து, பா.ஜ.க ஆட்சி நடக்கும் இமாசலப்பிரதேசலேயே, சுமார் 11 கோடியே 95 லட்சம் ரூபாய் அளவிற்கு, விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் மோசடி நடந்திருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதாவது, இமாசலப்பிரதேச மாநிலத்திலுள்ள 12 மாவட்டங்களில் மட்டும் 11 ஆயிரத்து 388 பேர், விவசாயிகள் என்ற பெயரில் தலா ரூ. 6 ஆயிரம் நிதியுதவி பெற்றிருப்பது அம்பலமாகி இருக்கிறது.

அதுமட்டுமல்ல, இவ்வாறு மோசடியாக நிதியுதவி பெற்றவர்கள் அனைவரும் வருமான வரி செலுத்துபவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளனர். இவ்வாறு மோசடி செய்தவர்களிடமிருந்து பணத்தை மீட்கும் நடவடிக்கைகள் துவங்கியிருப்பதாகவும், ஆனால், இதுவரை ரூ. 17 லட்சத்து 82 ஆயிரம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Also Read: “கிசான் திட்ட மோசடி வழக்கில் 101 பேர் கைது”: ஆளும் கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பா? - CBCID போலிஸ் விசாரணை!