India

“ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம நோய்” : 6 நாளில் 570 பேர் பாதிப்பு - மருத்துவக்குழு தீவிர ஆய்வு!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் உள்ள ஏலூரில் கடந்த 4ம் தேதி சாலையில் சென்றவர்கள் மற்றும் அப்பகுதியில் வேலை செய்தவர்கள் என பலர் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தனர். மேலும் தொடர்ந்து பலரும் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் ஏலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கடந்த 5ம் தேதி 150க்கும் மேற்பட்டோர் ஒரேநாளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று காலை வரை 570 பேர் மர்மநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மர்மநோய்க்கு ஒருவர் உயிரிழந்ததால், பல்வேறு ஆய்வுகளை மாநில அரசு நடத்தி வருகிறது. அதன்படி, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் வீட்டுக்கும் சென்று, அவர்கள் சாப்பிட்ட உணவுப்பொருட்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த மர்ம நோய்க்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால், பாதித்தவர்களின் உடலில் லெட் மற்றும் நிக்கல் டாக்சிஸ் என்னும் நச்சு கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த நச்சு எவ்வாறு கலந்தது என்று தெரியவில்லை.

இதனால், பாதிக்கப்பட்டவர்கள் முதுகுத்தண்டிலிருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழு மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த மருத்துவக்குழு மற்றும் உலக சுகாதார அமைப்பு சார்பிலும் ஏலூரில் ஆய்வு நடக்கிறது.

Also Read: “விவசாயிகள் கண்ணியமாக வாழ தேவையான அனைத்தையும் திமுக செய்யும்” : தேர்தல் பரப்புரையில் திருச்சி சிவா உறுதி!