India
“விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுக” - குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை!
விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி, தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
“டெல்லி சலோ” என்ற செயல் முழக்கத்துடன், பல மாநிலங்களிலிருந்து பல நூறு மைல் தூரத்தைக் கடந்து, இந்திய நாட்டின் தலைநகரை முற்றுகையிட்டு; பசியும், பட்டினியுமாகக் காத்துக் கிடந்து; தங்களை வாட்டி வதைக்கும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், ஏறக்குறைய ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட விவசாயப் பெருமக்கள், எஞ்சியிருக்கும் தங்கள் வாழ்வாதாரத்தையும், நாட்டின் முதுகெலும்பான வேளாண்மையையும் பாதுகாத்திட டிராக்டர்களுடன் சென்று, மத்திய பா.ஜ.க அரசு எதேச்சாதிகாரத்துடன் கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி ஹரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல்காந்தி, எம்.பி., தி.மு.க சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்பி., தேசியவாத காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் சரத்பவார், எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா ஆகிய எதிர்க்கட்சி தலைவர்கள் மேதகு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை இன்று (9.12.2020) மாலை 5.00 மணி அளவில் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர்.
அப்போது, “2018ஆம் ஆண்டில், நாடாளுமன்றத்திலேயே எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக் கொள்வோம் என்று உறுதி அளித்துவிட்டு, அந்த வாக்குறுதியை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்திருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு. இந்தியாவில் உள்ள விவசாயிகளில் 50 சதவிகிதத்திற்கு மேல் சிறு, குறு விவசாயிகள். இவர்கள் விளைவிக்கும் தங்கள் உற்பத்திப் பொருட்களை, வணிகர்கள் கேட்கும் விலைக்கு விற்கும் நிலையில் இருக்கிறார்களே தவிர, விவசாயிகளே தங்கள் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை இச்சட்டத்தின் மூலம் கிடைக்காது.
எனவே, விவசாயிகளை பெருமளவில் தற்கொலைக்கு தூண்டக்கூடிய இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்” என்று தி.மு.க செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., தி.மு.க. சார்பில் இந்தியக் குடியரசுத் தலைவரிடம் தெரிவித்தார்.
Also Read
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!
-
ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!
-
கரூர் விவகாரம் “நாங்க வழக்குப் போடல” - நீதிமன்றத்தை ஏமாற்றிய தவெக: பாதிக்கப்பட்டவர்கள் புகாரால் ட்விஸ்ட்