India

“பேரறிவாளனை விடுவிப்பது குறித்து ஆளுநர்தான் முடிவு செய்ய வேண்டும்” - உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ பதில்!

பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பாக தமிழக ஆளுநர்தான் முடிவு எடுக்கவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

எந்த முன்னேற்றமும் இல்லாமல் நிலுவையில் உள்ள பெல்ட் வெடிகுண்டு வழக்கைக் காரணம் காட்டி 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள தன்னை விடுவிப்பதில் தமிழக ஆளுநர் முடிவு எடுக்காமல் உள்ளார். எனவே, தன்னை விடுவிப்பதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று பேரறிவாளன் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த உச்சநீதிமன்றம் ஏன் ஆளுநர் இதுவரை எந்த முடிவு எடுக்காமல் உள்ளார் என்று தமிழக அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியது.

இதனைடையே வழக்கு தொடர்பாக சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தில் பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அதில், பேரறிவாளனை விடுவிப்பது என்பது ஆளுநருக்கும் பேரறிவாளனுக்கு இடையே உள்ள பிரச்சனை.

பேரறிவாளனை விடுவிக்க வேண்டுமா இல்லையா என்பதை ஆளுநர் தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கும் சி.பி.ஐ-க்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும், ஆளுநர் வழக்கு குறித்த எந்த தகவலையும் கேட்டு கடிதம் எழுதவில்லை.

விடுவிக்க வேண்டும் என்ற பேரறிவாளனின் கோரிக்கை தொடர்பான வழக்கிற்கும், பெல்ட் வெடிகுண்டு வழக்கு விசாரணைக்கும் தொடர்பு இல்லை.

மேலும், தற்போது சி.பி.ஐ விசாரித்து வரும் பெல்ட் வெடிகுண்டு தொடர்பான வழக்கின் இறுதி அறிக்கையை யாருக்கும் வெளிப்படுத்த தேவை இல்லை என்றும் சி.பி.ஐ தனது பதில் கூறியுள்ளது.

இதனிடையே பேரறிவாளன் வழக்கு திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Also Read: 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற பரிந்துரை - தொழிலாளர் விரோத மோடி அரசின் அடுத்த திட்டம்!