India

மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் வந்தது ஓ.டி.டி. மற்றும் செய்தி இணையதளங்கள்... அரசாணை வெளியீடு!

திரைப்படங்கள், நீண்ட தொடர்கள் உள்ளிட்டவற்றை வெளியிடும் ஓ.டி.டி இணைய தளங்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்து, அவற்றை மத்திய செய்தி ஒளிபரப்புத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையேதான் தற்போது இவற்றை மத்திய அரசினுடைய செய்தி ஒளிபரப்புத் துறையின் கீழ் கொண்டு வந்து இருப்பதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஓ.டி.டி. இணைய தளங்களில் வெளியிடப்படும் திரைப்படங்கள், தொடர்கள், ஆணவப் படங்கள் ஆகியவற்றை வெளியிடும் முன்பாக உரிய அனுமதியை பெறுவது உள்ளிட்ட கட்டுப்பாட்டு விதிமுறைகளையும் மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை எந்தவித முன் அனுமதியும், கட்டுப்பாடுகளும் இல்லாமல் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், தொடர்கள் ஆகியவை ஓ.டி.டியில் வெளியிடப்பட்டு வந்தன. இனிமேல் மத்திய அரசினுடைய முன் அனுமதியை பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட வாய்ப்பு உள்ளது. அதே போல், செய்தி இணையதளங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

Also Read: “OTT ரிலீஸுக்கு அதிகாரமுண்டு” - சூர்யாவுக்கு ஆதரவாக பாரதிராஜா உட்பட 30 தயாரிப்பாளர்கள் கூட்டறிக்கை!