India

பீகார் தேர்தல் முடிவுகள்: தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பிடிப்பது யார்? - நீடிக்கும் இழுபறி! #Bihar

பீகார் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கும், பா.ஜ.க கூட்டணிக்கும் இடையே இழுபறி நீடித்து வருகிறது.

பீகாரில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. மூன்று கட்ட வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

பீகாரின் 243 தொகுதிகளில் 3,733-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 55 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில் 7.30 கோடி வாக்காளர்களில் 4.16 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு வரை காலதாமதமாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக வாக்குப்பதிவு மையங்கள் அதிகரிக்கப்பட்டதும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டதுமே முடிவுகள் வெளியாக தாமதமாவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

தொடக்கத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்த நிலையில், பா.ஜ.க - ஜே.டி.யு கூட்டணி சற்று கூடுதலான இடங்களில் முன்னிலை வகிக்கத் துவங்கியது. இந்த நிலை தொடர்ந்து தற்போது பல தொகுதிகளில் குறைவான வாக்கு வித்தியாசங்களுடன் இழுபறி நீடித்து வருகிறது.

சற்று முன்னர் நிலவரப்படி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் 76 இடங்களிலும், காங்கிரஸ் 19 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பா.ஜ.க 72 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

இதுவரை பீகாரில் 93 இடங்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. பா.ஜ.க 29 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் 17 இடங்களில் வென்றுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும் வென்றுள்ளது.

Also Read: பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் : ஆர்.ஜே.டி - காங்கிரஸ் கூட்டணி முன்னிலை! #BiharElectionResults