India

கொரோனா காலத்தில் கடன்வாங்கி குடும்பத்தை சமாளிக்கும் நிலைக்கு ஆளான இந்திய மக்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கால் இந்தியாவின் பொருளாதாரமும் படுமோசமான நிலையை எட்டியுள்ளது. இந்தியாவில் ஏற்கெனவே இருந்த பொருளாதார பிரச்சனைக்கு மத்தியில் கொரோனா இந்தியாவை நிலைகுலையச் செய்துள்ளது.

குறிப்பாக, கொரோனா பொதுமுடக்க காலகட்டத்தில் 46% மக்கள் கடன் வாங்கி குடும்பச் செலவுகளை கவனித்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த பொருளாதார நிலையைவிட இந்தாண்டு மோசமாக இருக்கும் என்று உலக வங்கி முன்பே எச்சரித்தது.

இந்நிலையில், ஹோம் கிரெடிட் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பொதுமுடக்க காலகட்டத்தில் இருந்த, மக்களின் கடன் வாங்கும் முறைகளைப் புரிந்துகொள்ள ‘ஹோம் கிரெடிட் இந்தியா’ (Home Credit India) நிறுவனம், இந்தியாவின் 7 முக்கிய நகரங்களில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.

இந்த ஆய்வில், சுமார் 46 சதவிகித இந்தியர்கள், கொரோனா காலத்தில் தங்களின் குடும்பச் செலவுகளை கடன் வாங்கியதாகக் கூறியுள்ளனர். அதில், பெரும்பாலானோர் ஊதியவெட்டு அல்லது ஊதியத் தாமதம் காரணமாகவே தாங்கள் கடன்வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும், 27 சதவிகிதம் பேர், முந்தைய கடனுக்கான மாதத் தவணைகளைச் செலுத்துவதற்காக கடன் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது, பதிலளித்தவர்களில், சுமார் 14 சதவிகிதம் பேர் கொரோனா பொதுமுடக்கத்தின்போது, வேலை இழப்பைச் சந்தித்ததால் கடன் வாங்கினோம் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் 50 சதவிகிதம் பேர் நிலைமை இயல்பானவுடன் அல்லது தாங்கள் வேலைகளுக்குத் திரும்பியவுடன் கடன் வாங்கிய தொகையைத் திருப்பித் தருவோம் என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால், 13 சதவிகிதம் பேர், தங்களின் முந்தைய கடன்தொகையைச் செலுத்திய பின்னரே, பொதுமுடக்கத்தின்போது, வாங்கிய தொகையைத் திருப்பித் தருவதைப் பற்றி முடிவு செய்யவுள்ளதாகக் கூறியதாக தெரிகிறது.

Also Read: “கடந்தாண்டை விட குறைவான செலவு.. ஆனால், இலக்கை தாண்டிய நிதிப்பற்றாக்குறை” : என்ன செய்யப்போகிறது மோடி அரசு?