India

“ஓரணியில் திரண்டு சமூக நீதிக்காகப் போராடுவதுதான் ஒரே வழி” - 50% இடஒதுக்கீடு தீர்ப்பு குறித்து கி.வீரமணி!

மருத்துவக் கல்வியில் இந்த ஆண்டு 50 சதவீத இடஒதுக்கீடு கிடையாது எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்பில் அகில இந்திய இடஒதுக்கீட்டுக்கு 50 விழுக்காட்டினை இந்த ஆண்டு அமல்படுத்த முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் இன்றைய (26.10.2020) தீர்ப்பு மிகவும் அதிர்ச்சியாகவும், ஏமாற்றம் தருவதாகவும் அமைந்துள்ளது என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி இத்தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அறிக்கை வருமாறு:

மருத்துவப் படிப்பில் அகில இந்திய இட ஒதுக்கீட்டுக்கு 50 விழுக்காட்டினை அமுல்படுத்த முடியாது என்ற மத்திய அரசின் பிடிவாதமான பதிலை அப்படியே ஏற்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும், ஏமாற்றத்தைத் தருவதாகவும் அமைந்துள்ளது.

இந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் வழக்காடிகளான கட்சிகளின் சார்பில் எடுத்துவைத்த வாதங்களின்போது, குறைந்தபட்சம் இந்த ஆண்டிற்கு 50 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு வாய்ப்பு இல்லாவிட்டாலும், 27 சதவிகிதப்படி இந்த ஆண்டிற்கு மட்டும் - ஒதுக்கலாமே என்று சொன்ன நல்ல யோசனையின்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை - உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பின் மூலம் கானல்நீர் வேட்டையாகி விட்டது! இந்த ஆண்டு கிடைக்க உத்தரவிட முடியாது என கைவிரித்துவிட்டது உச்சநீதிமன்றம்.

அசல் அநியாயம்; அப்பீலில் அதுவே காயம் (நிரந்தரம் உறுதிப்படுத்தும்) என்று கிராமப்புற மக்களிடையே ஒரு பழமொழி உண்டு அதனை நினைவூட்டுவதாகவே இன்றைய தீர்ப்பு அமைந்துள்ளது.

மக்களின் கடைசி நம்பிக்கைக்கு இந்த நிலை என்கிறபோது மக்கள் மன்றத்தைத் திரட்டி அனைவரும் ஒருமித்த குரலில், ஓரணியில் திரண்டு சமூக நீதிக்காகப் போராடுவதுதான் ஒரே வழி! அதுபற்றி அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் சிந்திக்குமாக!” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: OBC இடஒதுக்கீடு : இரட்டை வேடம் போடாமல் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுங்கள் - மு.க.ஸ்டாலின் அறிவுரை!