India

7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க உத்தரவிடுக - உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

நீட் தேர்வு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு வரை அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர். ஆனால், இப்போது ஒற்றை இலக்கத்தில் கூட மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீட்டை இந்தாண்டே வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

7.5 சதவீத உள் இடஒதுக்கீடு மசோதா தமிழக சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தாமதித்து வருகிறார். ஆளுநரின் ஒப்புதலை விரைந்து பெறவேண்டிய தமிழக அரசு மவுனம் காக்கிறது.

7.5 சதவீத உள் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால்தான் இந்த கல்வியாண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிட முடியும். ஆகவே, இந்தச் சட்டமுன்வடிவிற்கு உடனடியாக ஒப்புதல் அளித்து, அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை நிறைவேற்றிடவேண்டும் என தமிழக ஆளுநருக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக் கோரும் மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கவேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து ஆளுநரை வலியுறுத்தி வருகின்றனர்.

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி தற்போது கவுன்சிலிங் தொடங்க உள்ள நிலையில் இனியும் ஆளுநர் ஒப்புதல் வழங்க தாமதித்தால் இந்த ஆண்டு மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு கடன் கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போய்விடும். ஆகவே உடனடியாக அந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

Also Read: “நீட்: 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திடுக” - ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!