India
இனி NDA கூட்டணியில் பா.ஜ.க தவிர யார்தான் இருக்கிறார்கள்?
பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சிவசேனா, சிரோன்மணி அகாலி தளம் கட்சிகள் வெளியேறிவி்ட்ட நிலையில், இனி கூட்டணியில் யார்தான் இருக்கிறார்கள் என்று சிவசேனா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய அமைச்சர் பதவியிலிருந்து சிரோன்மணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பதவி விலகினார்.
வேளாண் மசோதாக்களுக்கு எதிராக தொடர்ந்து விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எதிர்த்தும், பொதுவெளியில் போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.
கடும் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல், நாடாமன்றத்தில் 3 மசோதாக்களையும் நிறைவேற்றியது பா.ஜ.க அரசு. தற்போது அவற்றிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதற்கிடையே, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக சிரோன்மணி அகாலிதளம் நேற்று அறிவித்தது. 1997-ம் ஆண்டு முதல் பா.ஜ.க கூட்டணியில் இருந்துவரும் அகாலி தளம் கூட்டணியிலிருந்து விலகியுள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக பா.ஜ.க, சிவசேனா இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் சிவசேனா கட்சி பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறியது.
அதற்கு முன்னதாக, ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து தரவில்லை என்பதால் தெலுங்குதேசம் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க தலைமையிலான கூட்டணியிலிருந்து கடந்த இரு ஆண்டுகளுக்குள் 3 முக்கியக் கட்சிகள் விலகியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
சாம்னா தலையங்கத்தில், “பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கடைசித் தூணாக இருந்த சிரோன்மணி அகாலி தளம் கட்சியும் வெளியேறிவிட்டது. ஏற்கெனவே சிவசேனா கட்சியும் என்.டி.ஏ கூட்டணியிலிருந்து விலகிவிட்டது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் இரு முக்கியத் தூண்கள் வெளியேறிவிட்டன. இனிமேல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வெளியேறுவதற்கு யார் இருக்கிறார்கள்? இப்போதுள்ள கூட்டணியை தேசிய ஜனநாயகக் கூட்டணி என எவ்வாறு அழைக்கமுடியும்? ” எனக் கேள்வி எழுப்பியுள்ளது.
Also Read
-
சமூகநீதி நாளில் சமூக அநீதி : மாணவர் பாரதிதாசனுக்கு நெருக்கடி தருவது கேவலத்தின் உச்சம் - உதயநிதி ஆவேசம்!
-
லண்டன் பயணம் : செய்தியாளர்களைச் சந்திக்காமல் சென்ற முதலமைச்சர் விஜய்!
-
மும்மொழி திட்டத்தைக் கைவிட வேண்டும் : ஒன்றிய அரசுக்கு, உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது என்ன?
-
தமிழ்நாட்டில் தொடர்கதையாகும் விலைவாசி உயர்வு! - த.வெ.க.வின் நிர்வாகத் தோல்விக்கு எழும் கண்டனங்கள்!
-
‘சமூகநீதி நாள்’ - அண்ணா அறிவாலயத்தில் உடன்பிறப்புகளுடன் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்பு!