India

“தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்” - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாளுக்கு தலைவர்கள் வாழ்த்து!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மாநிலங்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், இன்று தனது 88வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

10 ஆண்டுகள் தொடர்ந்து இந்திய நாட்டின் பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங், மத்திய நிதி அமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநர், தலைமை பொருளாதார ஆலோசகர் என பல்வேறு பொறுப்புகளிலும் திறம்பட பணியாற்றியவர்.

மன்மோகன் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தி.மு.க தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தொலைபேசி மூலமாக மன்மோகன் சிங்கைத் தொடர்புகொண்டு, தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

File image

பின்னர், ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இதயபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள்! அவரது தொலைநோக்குப் பார்வையுடனான தலைமையும், எதிர்காலத் திட்டங்களும் உலக அளவில் இந்தியாவுக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தக் காரணமாயிருந்தன. மக்களுக்குத் தொடர்ந்து ஆற்றிவரும் சேவைக்கு நன்றி. நல்ல உடல்நலமும் மகிழ்ச்சியும் பெற்றிட வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “மன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் இல்லாததை இந்தியா உணர்கிறது. அவரது நேர்மை, கண்ணியம் மற்றும் அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “இளைஞர்களை இழுக்க பெரியாரை வைத்து நாடகமாடும் பா.ஜ.க” - TOI கட்டுரையை சுட்டிக்காட்டி கி.வீரமணி விளாசல்!