India

தன் பசுவை கொன்ற சிறுத்தை புலியை ஒரு வருடமாகக் காத்திருந்து கொன்ற தோட்டத் தொழிலாளி!

கேரள மாநிலம் மூணாரில் உள்ள கன்னிமலை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது. இந்த பகுதியில், வனத்துறை அதிகாரிகள் ரோந்து சென்றபோது உடலில் பலத்த காயங்களுடன் சிறுத்தை ஒன்று கன்னி பொறிக்குள் சிக்கி இறந்து கிடந்தது.

இதனால், சந்தேகம் அடைந்த வனத்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையின் போது மூணாறு உதவி வனப்பாதுகாவலர் பி.சஜீஷ் குமார், வனச்சரகர் எஸ்.ஹரீந்திரநாத் ஆகியோர் கன்னிமலை தேயிலைத் தோட்ட பகுதிக்குச் சென்றனர்.

அப்போது தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிடம் விசாரணையை தொடங்கினர். இந்தநிலையில் அங்கு வேலையைச் செய்யும் தோட்டத் தொழிலாளி குமாரை விசாரித்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். எனவே, சந்தேகமடைந்த வனத்துறையினர் அவரிடம் தீவிர விசாரணையைத் தொடங்கினர்.

விசாரணையில் கூறியதாவது, நாங்கள் பாசமாக வளர்த்த பசுவை ஒரு வருடத்திற்குமுன் சிறுத்தை கொன்றுவிட்டது. தனது பசுவைக் கொன்ற சிறுத்தைப் புலியை எப்படியாவது பிடித்து கொலை செய்யவேண்டும் என்று திட்டமிட்டு அது வரும் வழியில் பொறியை வைத்துக் கடந்த ஒரு வருடமாகக் காத்திருந்ததாகவும், கடந்த செப் 8-ம் தேதி இரவு நேரத்தில் வந்த போது தான் வைத்த பொறியில் சிறுத்த மாட்டிக் கொண்டது தெரிய வந்ததும் கத்தியால் குத்தி கொன்றதாகத் தெரிவித்தார். இந்தநிலையில் போலிஸார் குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.