India

மதவெறி அரசியலை தொடர்ந்து எதிர்த்த சமூக செயற்பாட்டாளர் சுவாமி அக்னிவேஷ் காலமானார்!

சமூக செயற்பாட்டாளரும் ஆரிய சமாஜ் தலைவருமான சுவாமி அக்னிவேஷ் உடல்நலக் குறைவால் டெல்லியில் இன்று காலமானார்.

சுவாமி அக்னிவேஷ் 1939ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி ஆந்திர பிரதேசத்தில் பிறந்தார். கொல்கத்தா செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்றார். ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட அக்னிவேஷ் ஆரிய சமாஜத்தில் இணைந்தார்.

ஹரியானா மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1979ல் அம் மாநில கல்வித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். சமூக செயற்பாட்டாளராகப் பணியாற்றிய சுவாமி அக்னிவேஷ் கொத்தடிமை தொழிலாளர் விடுதலை முன்னணி மூலம் கொத்தடிமை முறைக்கு எதிராகப் போராடினார்.

சுவாமி அக்னிவேஷ் 2004-2014 வரை ஆரிய சபா உலகக் குழுவின் தலைவராக இருந்தார். சுவாமி அக்னிவேஷ் தொடர்ந்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி வந்தார். 2011-ல் மாவோயிஸ்டுகளுக்கும் அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்கான தூதராகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

பாசிச பா.ஜ.கவின் மதவெறி அரசியலை தொடர்ந்து எதிர்த்து, மதச்சார்பின்மையே இந்தியாவின் அடையாளம் என்றவர் சுவாமி அக்னிவேஷ். அதனாலேயே பா.ஜ.க குண்டர்களால் பலமுறை தாக்குதலுக்கு உள்ளானவர்.