India

வரும் கல்வியாண்டு முதல் அமலாகிறது புதிய கல்வி கொள்கை? - மாணவர்களின் கல்விக்கனவை சிதைக்க பாஜக அரசு தீவிரம்

இந்தியாவை இந்து ராஷ்டிராவாக மாற்றுவதற்கு மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு மக்கள் நல விரோத சட்டங்களையும் நடவடிக்கைகளையும் செயல்படுத்தி வருகிறது.

இதனால் மதச் சார்பின்மைக்கே எடுத்துக்காட்டாக உள்ள இந்தியாவின் நன்மதிப்பு உலக நாடுகளிடையே சிறுமைப்பட்டு வருகிறது. இவை எவற்றையும் கருத்தில் கொள்ளாமல் ஆர் எஸ் எஸ்ஸின் கொள்கைகளை பிரகடனப்படுத்துவதையே திண்ணமாக உள்ளது மத்திய மோடி அரசு.

அவ்வகையில் நாட்டில் உள்ள இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை என்பதை இயற்ற மும்முரம் காட்டி வருகிறது.

இந்த புதிய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு சீரான படிப்பை தருவதற்கு பதிலாக குலக் கல்வியை போதித்து அவர்களின் எதிர்காலத்தை குழித் தோண்டி புதைப்பதற்காகவே இயற்றப்படுகிறது என குற்றஞ்சாட்டி நாடு முழுவதும் இதற்கு பெரும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் வலுத்து வருகின்றன.

இருப்பினும் இதற்காக கருத்து கேட்புகளை முறையாக நடத்தாமல் பெரும்பான்மையை கொண்டு சட்டமாக இயற்றும் பணியை மோடி அரசு நடத்தி வருகிறது. அவ்வகையில் எதிர்வரும் கல்வி ஆண்டு முதல் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டப்பட்டுள்ளது.

அதன்படி மாநில வாரியாக எப்படி புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தலாம் என்பது குறித்து நாளை (ஆக.,24) முதல் 31ம் தேதி வரை பள்ளி ஆசிரியர்கள் இணையதளம் மூலம் கருத்துகளை தெரிவிக்கும் படி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அனிதா அகர்வால் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த தகவலை மாநில அரசுகள் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கருத்துகளை தெரிவிக்க ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: மதுரையில் ரகசியமாக நடந்த புதிய கல்வி கொள்கை கருத்து கேட்பு கூட்டம் : முறியடித்த ஜனநாயக அமைப்புத் தோழர்கள்