India

“சுஷாந்த் சிங் ராஜ்புட் வழக்கை சி.பி.ஐ விசாரிக்கும்” - உச்சநீதிமன்றம் உத்தரவு!

சுஷாந்த் சிங் ராஜ்புட் மரண வழக்கை சி.பி.ஐ விசாரிக்கக்கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின் பேரில் பீகாரில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது சரி என்றும் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஜூன் 14-ம் தேதி சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். மும்பை காவல்துறை இது தற்கொலை எனவும், அவருக்கு மனச்சோர்வு இருந்ததாலும், திரைத்துறையில் உள்ள சிலர் அவரை புறக்கணித்ததாலும் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தது.

சுஷாந்த் சிங் மரணமடைந்த ஒரு மாதத்துக்குப் பின் அவரது தந்தை பீகார் காவல்துறையில் ஒரு புகார் அளித்தார். அதில் தன்னுடைய மகனின் 28 வயது தோழியான ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் சுஷாந்த் சிங்கை பொருளாதார ரீதியாக ஏமாற்றியும், மன ரீதியாக துன்புறுத்தியும் உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து பீகார் காவல்துறை மும்பைக்கு சென்று விசாரணை நடத்தியது. அந்த விசாரணையே அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ விசாரணைக்கு இட்டுச்சென்றது. பீகாரில் பதியப்பட்ட அந்த வழக்கை மும்பைக்கு மாற்றுமாறு ரியா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில்தான் தற்போது உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Also Read: “என்னிடம் உள்ள சுஷாந்தின் சொத்து இதுதான்” : இரண்டு புகைப்படங்களை வெளியிட்ட சுஷாந்த் சிங்கின் காதலி!