India

குழந்தைகளின் கல்விக்காக தாலியை அடகு வைத்து புதிய டி.வி வாங்கிய தாய்: ஆன்லைன் கல்வியால் அரங்கேறும் அவலம்!

கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் 4 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரும்பாலான தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன.

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தொலைக்காட்சி வழியாகவும் மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டுகிறது. இதனிடையே, ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க வாய்ப்பற்ற ஏழை எளிய குழந்தைகள் இதனால் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் குற்றம் சாட்டினார்.

குறிப்பாக, ஆன்லைன் வகுப்புக்கு தேவையான மொபைல், இணைய வசதி மற்றும் தொலைக்காட்சி போன்ற எந்த வசதிகளும் இல்லாத ஏழைக் குடும்பத்தில் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி என்பது அரிதான ஒன்றாக மாறிப்போயுள்ளது. இதனால் வீடுகளில் தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள் கல்வி பெற முடியாத சூழலே நிலவு உள்ளது.

இந்த சூழலில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பிற்கு தேவையான செல்போன் உள்ளிட்ட வசதிகளை செய்து தருவதற்காக கடன் வாங்கியோ, வீட்டில் உள்ள நகை மற்றும் பொருள்களை விற்று வாங்கிதரும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில், கர்நாடக மாநிலத்தில் தனது குழந்தைகளின் ஆன்லைன் கல்விக்காக தாய் ஒருவர் தனது தாலியை அடமானம் வைத்து தொலைக்காட்சி வாங்கிய சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் கதக் மாவட்டம், நரகுந்த தாலுகாவில் உள்ள ரட்டேரநாகனுரு கிராமத்தை சேர்ந்தவர் கஸ்தூரி. இவரது கணவர் தினசரி கூலி வேலைக்குச் சென்று அதில் வரும் வருமானத்தில் தான் குடும்பத்தை நடத்திவருகின்றனர்.

கஸ்தூரியின் இரண்டு குழந்தைகளில் ஒருவர் 7ம் வகுப்பு மற்றொருவர் 8ம் வகுப்பும் செல்கின்றனர். இந்த நிலையில் இருவருக்கும் தொலைக்காட்சி மூலம் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், கஸ்தூரி வீட்டில் டி.வி இல்லாதததால் இரண்டு குழந்தைகளும் கல்வி பயில முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதனால் மனமுடைந்த கஸ்தூரி, தனது தங்க தாலியை அடமானம் வைத்து 16,000 ரூபாய் மதிப்புள்ள புதிய டி.வி ஒன்றை வாங்கியுள்ளார். இது பற்றிய செய்தி சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், அவரது தாலியை விரைவில் மீட்டு அவரிடம் ஒப்படைக்கப்படும் என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் குடும்ப நிலைமைகளை உணராமல் அவசரகதியாக ஆன்லைன் மூலம் பாடம் நடத்துவதால், ஏழை மாணவர்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது, அதனால் மனவேதனை அடைந்த பல மாணவர்கள் தற்கொலை செய்துக் கொள்ளும் நிலையும் அரங்கேறியுள்ளது. எனவே இதுதொடர்பாக மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: ஆன்-லைனில் படிக்க ஸ்மார்ட்போன் இல்லை: 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை