India

“ராமராஜ்ஜிய வாக்குறுதி அளித்துவிட்டு குண்டர்கள் ராஜ்ஜியம்” - பத்திரிகையாளர் படுகொலைக்கு ராகுல் கண்டனம்!

உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி. கடந்த 16-ம் தேதி தன்னுடைய மருமகளைச் சிலர் கிண்டல் செய்தது தொடர்பாக விக்ரம் ஜோஷி போலிஸில் புகார் செய்திருந்த நிலையில் திங்கட்கிழமை இரவு பைக்கில் தனது இரு மகள்களுடன் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது 10 பேர் கொண்ட கும்பல் தாக்கியது.

விஜய் ஜோஷி மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து அந்தக் கும்பல் தப்பிவிட்டது. இந்தக் காட்சிகள் அனைத்தும் அருகே இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. மகள்களின் கண்ணெதிரிலேயே விஜய் ஜோஷி சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட விக்ரம் ஜோஷி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்தப் படுகொலைச் சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி படுகொலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி அவரது உறவினர் ஒருவரைக் கிண்டல் செய்த நபர்கள் மீது புகார் செய்ததற்காக கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். ராம ராஜ்ஜியத்துக்கு வாக்குறுதியளித்துவிட்டு, குண்டர்கள் ஆட்சிதான் நடக்கிறது” எனச் சாடியுள்ளார்.

Also Read: “டெல்லியில் உ.பி பத்திரிகையாளர் சுட்டுக்கொலை” : மகள்களின் கண்முன்னே நடந்த பயங்கரம்!