India

“200% அளவுக்கு அதிகரித்த சைபர் தாக்குதல்; இந்திய சிறு-குறு நிறுவனங்கள் இலக்கு?” - அதிர்ச்சித் தகவல்!

கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த வாரம் இந்திய, சீன இராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 வீரர்கள் பலியானதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து இந்திய-சீன எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.

இந்திய - சீன எல்லையில் நடந்த மோதலுக்குப் பிறகு சீனாவில் இருந்து இந்தியா மீது சைபா் தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்துள்ளது. ஜூன் மாத தொடக்கத்திலிருந்து சைபர் தாக்குதல்கள் 200% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதற்றச் சூழலில் சைபர் தாக்குதல்கள் தூண்டிவிடப்பட்டுள்ளதாக சைபர் புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஜூன் 15 முதல் இன்று வரை சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீன ஹேக்கர்கள் இந்திய சைபர் ஸ்பேஸை தாக்க முயன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சைபர் பாதுகாப்பு அமைப்புகளின் கூற்றுப்படி, இந்த ஹேக்கர்களில் பெரும்பாலானோர் சீனாவின் சிச்சுவான் பகுதியைச் சேர்ந்தவர்கள். சீன இராணுவத்தின் சைபர் வார்ஃபேர் பிரிவின் தலைமையகம் சிச்சுவான். இந்த சைபர் தாக்குதல்களை சீன அரசு ஊக்குவிப்பதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.

வங்கித்துறை, தகவல் தொழில்நுட்பம், அடிப்படை கட்டமைப்புத் துறை போன்ற முக்கியத் துறைகளைச் சேர்ந்த சிறு குறு நிறுவனங்கள் இந்த சைபர் தாக்குதல்களில் இலக்காவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், இணையப் பாதுகாப்புகளை உறுதி செய்ய வேண்டிய நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என இணைய வல்லுநர்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

Also Read: “இந்தியா மீது சீனா நடத்திய சைபர் தாக்குதல் முயற்சி” - புலனாய்வு நிறுவனம் அதிர்ச்சித் தகவல்!