India

“ஊரடங்கில் கேள்விக்குறியான வனவிலங்குகளின் பாதுகாப்பு” - கடந்த ஒருவாரத்தில் மட்டும் 5 யானைகள் உயிரிழப்பு!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. இதனால் நாடுமுழுவதும் 5வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கை சாதகமாகக் கொண்டு வன விலங்குகளைக் கொல்லும் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

கடந்த மாதத்தில் கேரளாவில் கர்ப்பிணி யானை வெடி வைக்கப்பட்டிருந்த அன்னாசி பழத்தை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வனவிலங்குகளைப் பாதுகாக்க மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விலங்கின ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனையடுத்து வனப்பகுதியில் விலங்குகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் 5 யானைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் சுராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ஒரு குட்டி யானை உட்பட இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு வயது மதிக்கத்தக்க பெரிய யானை ராய்கர் வனப்பகுதியில் பண்ணையாளார்கள் அமைத்திருந்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சட்டவிரோதமாக மின் கம்பி அமைத்தது தொடர்பாக இரண்டு பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். இதனிடையடுத்து தம்தாரி மாவட்டத்தின் மேடம் சில்லி வனப்பகுதியில் குட்டி யானை ஒன்று சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளது.

யானை சேற்றில் ஆழத்தில் சிக்கிக் கொண்டதால் அதனை மீட்க முடியவில்லை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வனப்பகுதியை முறையாக கண்காணிக்காத 4 அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாநில அரசாங்க தரவுகளின்படி, சத்தீஸ்கரில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மனிதர்கள் - யானை மோதலில் 325 பேரும் 70 யானைகளும் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: அப்போ யானை.. இப்போ பசுமாடு.. பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் கர்ப்பிணி பசுவுக்கு உணவில் வெடியை வைத்த கொடூரம்!