India

“முத்த ஆசீர்வாத சாமியார் கொரோனாவுக்கு பலி” : முத்தம் கொடுத்து 24 பேருக்கு தொற்றை பரப்பிய கொடுமை!

இந்தியாவில், அதிகமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் 7-ஆவது இடத்தில் மத்திய பிரதேசம் உள்ளது. தற்போதைய நிலவரப்படி அங்கு 10 ஆயிரத்து 443 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ம.பி-யின் ரத்லம் மாவட்டத்தில் வசித்து வருபவர் “முத்த பாபா” எனப்படும் அஸ்லம் பாபா. தன்னைச் சந்திக்க வரும் பக்தர்களுக்கு கையில் ஒரு முத்தம் தந்து, ஆசி வழங்கி அனுப்புவார்.

இந்நிலையில், கொரோனா வந்தபோதும், முத்தம் தருவதை அவர் நிறுத்தவில்லை. மாறாக, தனது முத்தத்தால் கொரோனாவையே விரட்டுவேன் என்று கூறி வந்தார். இந்நிலையில்தான், முத்த பாபாவே தற்போது கொரோனா தொற்றுக்கு பலியாகி இருக்கிறார்.

அதுமட்டுமன்றி தனது முத்தம் மூலம் 24 பக்தர்களுக்கும் அவர் கொரோனா தொற்றைப் பரப்பிச் சென்றுள்ளார். இவர்களில் 13 பேர் நாயபுரா என்ற ஒரே பகுதியை சேர்ந்தவர்கள். மேலும் அப்பகுதியில், இதுவரை 4 பேர் கொரோனா காரணமாக பலியாகியுள்ளனர்.

இதில், குறிப்பிடத்தக்கது என்னவென்றால், மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகும், மக்கள் தொடர்ந்து அந்த சாமியாரிடம் ஆசி பெறத் திரண்டுள்ளனர்.

Also Read: தாராவியில் கட்டுக்குள் கொரோனா பரவல்.. கேரளா பாணியில் சாதித்த மராட்டியம்.. உதவிய #ChaseTheVirus!