India

“தவறான பரிசோதனை முடிவுகளால் கொரோனா தனிமை வார்டில் சிக்கிய 35 பேர்” : உ.பி-யில் அதிர்ச்சி சம்பவம்!

தனியார் ஆய்வகங்கள் அளித்த தவறான முடிவால் 35 பேர் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் 3 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நாள்தோறும் கொரோனா பரிசோதனைகள் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்லாது தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள அரசு அனுமதியளித்துள்ளது.

அதன்படி, ஐ.சி.எம்.ஆர் அனுமதியுடன் நாடு முழுவதும் 453 தனியார் ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், உ.பி.,யில் தனியார் ஆய்வகத்தின் தவறால், கொரோனா தொற்று இல்லாத 35 பேர், 3 நாட்கள் கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த 35 பேருக்கு லேசான காய்ச்சல் மற்றும் இருமல், சளி இருந்துள்ளது. இதனையடுத்து மருத்துவர்களின் பரிந்துரைப்படி அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதியானதை அடுத்து அரசின் தனிமைப்படுத்தல் மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

மீண்டும் அவர்களிடம் பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டு தேசிய வைரலாஜி இன்ஸ்டியூட்டிற்கு அனுப்பப்பட்டது. அப்போது அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லையென முடிவுகள் கிடைத்துள்ளன. இதனையடுத்து அவர்கள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

ஆனால், கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் இருந்த மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டதால், அவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். தவறான முடிவை அளித்த ஆய்வகத்தின் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், உ.பி அதிகாரிகள், அனைத்து தனியார் ஆய்வகங்களும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Also Read: “தனிமை வார்டில் இருந்ததால் மன உளைச்சல்” : கேரளாவில் இரண்டு கொரோனா நோயாளிகள் தற்கொலை!