India

“தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் நிர்ணயிக்க கோரி வழக்கு”: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2,26,770 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துத்துவமனைகள் பல லட்ச ரூபாய் வசூலித்து வருகின்றன. இது தொடர்பாக அபிஷேக் கோயங்கா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், “தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதால் நடுத்தர மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியவில்லை. அரசு மருத்துவமனைகளிலும் படுக்கை இல்லாத நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக அதிக பட்சமாக எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்பதை நிர்ணயித்து உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி அஷோக் பூஷன் அமர்விக் விசாரணைக்கு வந்தது.

இதனிடையே தொண்டு நிறுவனங்களின் கீழ் நடத்தப்படும் மருத்துவமனைகளில் இலவச சிகிர்ச்சை வழங்க வேண்டும் என்ற வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசிடம் இலவசமாக நிலத்தைப் பெற்றுள்ள அவர்கள் இலவசமாக கொரோனா சிகிர்ச்சை அளிக்கப்பட வேண்டும்.

ஆயுஷ்மான் காப்பீடு உள்ளவர்களிடம் 4,000 மட்டுமே வசூலிக்கும் அதே மருத்துவமனைகள் மற்றவர்களிடம் 5 லட்ச ரூபாய் வரை வசூலிப்பதாக வழங்கறிஞர் சுட்டிக்காட்டி வாதாடினார். அதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, “அதிகபட்ச லாபம் ஈட்டும் அந்த மருத்துவமனைகள் மக்களுக்காகவும் சேவை செய்ய வேண்டும்” என்று கூறினார்.

அப்போது தனியார் மருத்துவமனைகள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்,தற்போது 60 முதல் 70% வரை வருவாய் குறைந்துவிட்டதாகக் கூறினார். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Also Read: “மக்கள் எதிர்ப்பை மீறி எட்டுவழிச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றத் துடிப்பதா?” : மோடி அரசுக்கு வைகோ கண்டனம்!