India

ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு : என்னென்ன தளர்வுகள்? - மாநில அரசுகள் முடிவு செய்ய அனுமதி! #Lockdown

நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தியாவில் மார்ச் 25-ம் தேதியில் இருந்து பொது ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. நான்காவது கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது.

கொரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஐந்தாவது கட்ட ஊரடங்கு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மாநில அரசுகள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளையடுத்து, கொரோனா பாதிப்பு பகுதிகளை அடையாளம் கண்டு ஊரடங்கு தளர்வுகளை மேற்கொள்வது, போக்குவரத்தை இயக்குவது போன்ற விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளிடமே அளித்துள்ளது மத்திய அரசு.

மேலும், ஐந்தாம் கட்ட ஊரடங்கின்போது அன்லாக் 1.0 என்ற பெயரில் சில புதிய அறிவிப்புகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஊரடங்கு தளர்வுகள் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும்.

நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும். அப்பகுதிகளில் எந்தத் தளர்வுகளும் கிடையாது. பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்.

மற்ற பகுதிகளில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும். மேலும். அவசர தேவைகளைத் தவிர இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

முதியோர், கர்ப்பிணிகள், 10 வயதிற்கு உட்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்க.வேண்டும். கடைகளில் 5 நபருக்கு மட்டுமே அனுமதி. அதிக எண்ணிக்கையில் கூடுவதும் தடை செய்யப்படுகிறது.

திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கான கட்டுப்பாடு தொடர்கிறது. மாநிலங்களுக்கு இடையே மற்றும் உள்ளேயும் சரக்கு வாகனங்களை இயக்க தடை இல்லை. சிறப்பு ரயில்கள், பயணிகள் ரயில்கள், உள்நாட்டு விமான சேவை, வெளிநாட்டு விமான சேவை ஆகியவை கட்டுப்பாடுகளுடன் தொடரும்.

முதல்கட்ட தளர்வுகள் :

- ஜூன் 8 முதல் உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதி.

இரண்டாம் கட்ட தளர்வுகள் :

- பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறப்பு குறித்து மாநில அரசுகளின் ஆலோசனைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும்.

மூன்றாம் கட்ட தளர்வுகள் :

சினிமா தியேட்டர், பொழுதுபோக்கு பூங்கா, உடற்பயிற்சிக் கூடங்கள், மெட்ரோ ரயில்கள், நீச்சல் குளங்கள் ஆகியன திறப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

Also Read: “சென்னையில் கொரோனா தொற்று கட்டுக்குள் இல்லை... ஊரடங்கு நீட்டிப்பு அவசியம்” - மருத்துவக் குழு பரிந்துரை!