India

“சிறப்பு ரயில்களில் உணவின்றி 3 குழந்தைகள்; 9 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலி”: மோடி அரசால் தொடரும் அவலம்!

கொரோனா ஊரடங்கில் மேலும் ஒரு சோகமாக வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களில் உணவு, உரிய நேர சிகிச்சை இல்லாமல் 3 குழந்தைகள் மற்றும் 9 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வருமானமின்றி, உணவின்றி அவதிப்படுகின்றனர். வெளிமாநிலங்களில் வேலை செய்த வடமாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள், தங்களது ஊர்களுக்கு பல நூறு கிலோமீட்டர் தூரம் குழந்தைகள், மனைவியுடன் தங்களது பொருட்களை சுமந்துகொண்டு கொளுத்தும் வெயிலில் நடந்தே செல்கின்றனர்.

மத்திய, மாநில அரசுகள் வாகனப் போக்குவரத்தை ஏற்பாடு செய்யாமல், இவர்களைப் பற்றி கவலைப்படாமல் உள்ளது என்று அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மோடி அரசு, பொதுத்துறைகளை விற்பனை செய்வதிலே கவனமாக உள்ளதாக மக்கள் கொதிப்புடன் கூறுகின்றனர். இதில் நடந்தே சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில் மோதியும் வாகனங்கள் மோதியும் கொடூரமாக உயிரிழந்துள்ளனர்.

டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து அன்றாடம் பல சிறப்பு ரயில்கள் தொழிலாளர்களுக்காக விடப்படுகின்றன. தொழிலாளர்கள் ரயிலில் ஏறும் போதும், வழியில் அவை நிறுத்தப்படும் போதும் உணவளிக்க திட்டமிடப்பட்டு வந்தது. இவை, அரசு அல்லது சமூகவேவை அமைப்புகளால் அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எனினும் உணவு வழங்குவதில் பெரும் குறைபாடுகளால் உயிர்கள் பலியாகியுள்ளன.

இதில் பீகார் தொழிலாளர் பிண்ட்டு ஆலமின் என்பவரின் 4 வயது குழந்தை இர்ஷத் செவ்வாயன்று ஓடும் ரயிலிலேயே உயிரிழந்தது. இது குறித்து பிண்ட்டு ஆலம் கூறுகையில், “பசியால் எனது மகன் துடித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு உணவளிக்க வழியில் வந்த ரயில் நிலையங்களிலும் கடைகள் இல்லை. இதை வாங்க என்னிடம் பணம் இருந்து பலனளிக்காமல் எனது மகனை இழந்துவிட்டேன்” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

மற்றொரு சிறப்பு ரயிலில் குடும்பத்துடன் பயணம் செய்த சர்வேஷ்சிங் என்பவரின் ஒரு மாத பிஞ்சுக் குழந்தையும் கோரக்பூர் செல்லும் வழியில் செவ்வாயன்று ரயிலில் பலியானது. கடுமையானக் காய்ச்சல் ஏற்பட்டு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் குழந்தை இறந்துள்ளது.

இது குறித்து சர்வேஷ்சிங் கூறுகையில்,“ஜான்சியை கடந்த போது ரயில்வேதுறையின் அவசர உதவி தொலைபேசியில் புகார் அளித்தேன். ஆனால், சிகிச்சைக்காக அடுத்த 2 மணி நேரத்தில் வந்த ஒரய் ரயில் நிலையத்தில் மருத்துவர் பார்ப்பதற்குள் குழந்தையின் உயிர் பிரிந்தது என்றார். கடந்த மே 23 ஆம் தேதியன்று உத்தரப்பிரதேசம் அலிகர் மற்றும் டூண்ட்லா ரயில் நிலையங்களுக்கு இடையே 10 மாத குழந்தை ஓடும் ரயிலில் மூச்சுத்திணறலால் இறந்தது.

அதேப்போல், பல மாநிலங்களில் இருந்து ஒரே நேரத்தில் ரயில்கள் இயக்கப்பட்டதால் உத்தர பிரதேசம் பிகார், மத்திய பிரதேச மாநிலங்களில் ரயில் போக்குவரத்து தாறுமாறானது. 15 முதல் 30 மணி நேரம் ரயிகள் தாமதமாயின. பல ரயில்கள் சுற்று மார்கத்தில் திருப்பி விடப்பட்டன.

உணவு, குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். கடும் வெயில் காரணமாக வட மாநிலங்கள் உஷ்ணக்காற்று வேறு வீசூகிறது. இதனால் உ.பி மாநிலத்தில் 5 பயணிகளும், பிகார் மாநிலத்தில் 4 பயணிகளும் ரயிலிலேயே பலியாகியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 3 குழந்தைகள் மற்றும் 9 பயணிகள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பட்டினி கொடுமையால் புலம்பெயர் தொழிலாளி பரிதாப பலி : “உயிரிழந்தது தெரியாமல் தாயை எழுப்பமுயன்ற குழந்தை”!