India

“வங்கி கடன்களுக்கான EMI செலுத்த 3 மாதங்கள் கூடுதல் அவகாசம்” : ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. ஆனாலும் பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்த கொரோனா ஊரடங்கால் இந்திய பொருளாதாரம் அதளபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. இந்நிலையில் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ. 20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். பிரதமர் மோடியின் அறிப்பைத் தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கட்டமாக பொருளாதார திட்டங்கள் மற்றும் சீரமைப்பு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்தா தாஸ், வங்கி கடனுக்கான மாத தவணை (EMI) செலுத்துவதற்கு மேலும் 3 மாதங்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “இந்தியாவின் ரெப்போ விகிதம் மேலும் 40 புள்ளிக்கள் குறைக்கப்படுகிறது. அதனால் 4.4 சதவீதமாக இருந்த ரெப்போ விகிதம் 4 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இந்த ரெப்போ விகிதம் குறைக்கப்படுவதால், வீடு, வாகனம் உள்ளிட்ட வங்கி கடன்கள் மீதான வட்டி குறைய வாய்ப்பு உள்ளது.

மேலும், கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் தொழில்துறை உற்பத்தி குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, மார்ச் மாதத்தில் மூலதன பொருட்களின் இறக்குமதி 27 சதவீதம் குறைந்துள்ளது. அதேப்போல் மார்ச் மாதத்தில் தொழிற்துறை உற்பத்தியும் 17 சதவீதம் குறைந்துள்ளது.

இந்த சூழலில் ஏப்ரல் மாதத்தில் உணவுப் பொருள் பணவீக்கம் 8.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இறக்குமதி 58% குறைந்துள்ளது. 2020-21 நடப்பாண்டில் உள்நாட்டு உற்பத்தி சரிவில் இருக்கும்போது 2-வது அரையாண்டில் GDP-ல் முன்னேற்றம் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Also Read: "வீடில்லா ஏழைகளுக்கு 3 வேளை உணவு வழங்குகிறோம்” - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் ‘மாய்மால’ அறிவிப்புகள்!