India

ஊரடங்கால் 1,200 கி.மீ சைக்கிள் ஓட்டிய சிறுமியின் தந்தை பலி!

மோகன் பஸ்வான், ஹரியானா மாநிலம் கூர்கானில் ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளி. இவருக்கு 5 குழந்தைகள் இருக்கும் நிலையில் குடும்பத்தினர் பீகாரில் வசித்து வருகின்றனர். மோகன் பஸ்வானுக்கு ஒரு விபத்தினால் நடக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் தனது தந்தையுடன் ஹரியானாவில் வசித்து வந்தார் 15 வயது மகள் ஜோதி குமாரி.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்தார் மோகன் பஸ்வான். இதனால் இருவரும் உணவின்றித் தவித்து வந்த நிலையில், அவர்களின் வீட்டு உரிமையாளரும் இவர்களை வீட்டை காலி செய்ய அறிவுறுத்தினார்.

இதனால் செய்வதறியாது திகைத்த மோகன் பஸ்வான் பீகாரில் உள்ள சொந்த கிராமத்துக்கு திரும்பி அங்கேயே பிழைப்பைத் தேடிக்கொள்வது என முடிவு செய்தார். ஆனால் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில் ஊர் செல்ல வழியில்லாததால் கையில் இருந்த பணத்தை ஒரு சைக்கிள் வாங்கியுள்ளனர்.

இதையடுத்து, ஜோதி குமாரி, நடக்க இயலாத தனது தந்தையை சைக்கிளில் வைத்து சொந்த ஊருக்குப் பயணிக்க முடிவெடுத்துள்ளார். இவர்கள் கடந்த 2020ம் ஆண்டு மே 10ம் தேதி பீகாரை நோக்கி 1,200 கிமீ தூரம் சைக்கிளிலேயே பயணம் செய்யத் தொடங்கினர்.

7 நாட்கள் இரவு பகல் பாராத தொடர் சவாரிக்கு பின்னர் கடந்த 16-ம் தேதி பீகாரில் உள்ள சொந்த கிராமத்துக்கு தந்தையுடன் சென்றடைந்தார் ஜோதி குமாரி. 1,200 கி.மீ. தொலைவுக்கு தனது தந்தையை பின்னால் ஏற்றிக்கொண்டு ஒரு சிறுமி சைக்கிள் ஓட்டிச் சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தந்தையை வைத்து 1,200 கி.மீ சைக்கிள் ஓட்டிய ஜோதி குமாரியின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.

இந்நிலையில் ஜோதி குமாரியின் தந்தை மோகன் பாஸ்வான் இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுமியின் தந்தை உயிரிழந்ததையடுத்து மாவட்ட நிர்வாகம் உரிய உதவிகளை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Also Read: “கிணற்றில் மிதந்த 9 புலம்பெயர் தொழிலாளர்களின் சடலம்”- ஊரடங்கால் வேலையின்றி தற்கொலை?: தெலங்கானாவில் சோகம்!