India

“சுற்றிவளைக்க வேண்டாம்; நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள்” - ராகுல் காந்தி வேண்டுகோள்!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரத் திட்டங்களை அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பொருளாதார மீட்பு திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தினந்தோறும் அறிவித்து வருகிறார். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி காணொளிக் காட்சி மூலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது :

“கொரோனா ஊரடங்கால் ஏழை மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை மக்களுக்கான நிவாரணத்தை அதிகரிக்க வேண்டும். மக்களுக்கு வழங்கும் நிதியை நேரடியாக அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். மக்களுக்கு இப்போது பணம்தான் தேவை.

தேசிய ஊரக வேலை வழங்கும் திட்டத்தில் 200 நாளாக அதிகரிக்க வேண்டும். விவசாயிகள் நேரடியாக பணம் பெறும் வகையில் செய்ய வேண்டும். இவர்கள் நமது நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடியவர்கள். விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் நாம் உதவி செய்யாவிட்டால் நாட்டின் பொருளாதாரம் எழ முடியாது.

சமீபத்தில் நாடு முழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் படும் அவலத்தை பார்க்கும் போது எனது இதயம் கசிகிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் தொழிலாளர்கள் பலர் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். இவர்களுக்கான நிவாரணம் போதாது.” எனத் தெரிவித்தார்.

Also Read: "ஒரு பக்கம் மாடு; மறுபக்கம் மனிதன்" : ஊரடங்கு வறுமையில் புலம்பெயர் தொழிலாளி செய்த நெஞ்சை உருக்கும் செயல்!