India

“புதிய வடிவில் ஊரடங்கு... பொருளாதாரத்தை சீரமைக்க ரூ. 20 லட்சம் கோடி திட்டம்” - பிரதமர் மோடி அறிவிப்பு!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட மூன்றாவது கட்ட ஊரடங்கு மே 17ம் தேதியோடு நிறைவடையவுள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

பிரதமர் மோடி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :

ஒரே ஒரு வைரஸ் உலகத்தையே முடக்கியுள்ளது. கடந்த 4 மாதங்களாக கொரோனாவுடன் உலகமே போராடுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 3 லட்சம் பேர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது.

கொரோனா போன்ற தாக்குதல் நாம் எதிர்பார்த்தேயிராத ஒன்று. நம்மை நாமே தற்காத்துக்கொண்டு கொரோனாவிற்கு எதிராக போராட வேண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரம் ஆனதற்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் தோற்றுவிடக்கூடாது.

தொடக்கத்தில் நம்மிடம் ஒன்றும் இல்லை. இப்போது ஒரு நாளைக்கு 2 லட்சம் மருத்துவ பாதுகாப்பு கவசங்கள் மற்றும் N95 கவசங்களைத் தயாரிக்கும் நாடாக இருக்கிறோம்.

காசநோய், போலியோ போன்ற பிரச்னைகளை நாம் எதிர்கொண்டு போராடி இருக்கிறோம். கொரோனாவையும் நம்மால் எதிர்கொண்டு போராட முடியும் என்பதை நிரூபிப்போம்.

இந்தியாவில் வளம் இருக்கிறது. அறிவுபடைத்தவர்கள் இருக்கிறார்கள். புதிய விடியலை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. உலகுக்கே இந்தியா நம்பிக்கை ஒளியைக் கொடுத்து வருகிறது.

இந்திய பொருளாதார சிக்கலை சரி செய்ய ரூ.20 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும். இத்திட்டம் குறித்த விரிவான விவரங்களை நிதியமைச்சர் அறிவிப்பார்.

உள்நாட்டு சந்தையை நோக்கி நகரவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அனைவரும் உள்நாட்டு பொருட்களை வாங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

தொழிலாளர் நலச்சட்டங்களில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.

மாநிலங்களின் பரிந்துரையின் அடிப்படையிலேயே 4ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்படும். அதன் விபரம் மே 18ம் தேதிக்கு முன்பாக வெளியிடப்படும்.

Also Read: சென்னையில் ஒரே நாளில் 8 பேர் பலி... 510 பேர் பாதிப்பு - கொரோனாவின் பிடியில் தலைநகரம்! #Corona