India

“கார் மோதி சைக்கிளில் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர் பலி” : மோடி அரசால் தொடரும் அவலம் - அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எந்த வித ஏற்பாடுகளும் இன்றி ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கால்நடையாகவே தங்கள் சொந்த கிராமத்திற்கு சென்றனர். சுமார் 40 நாட்களுக்கு மேலாக பல்வேறு சிரமங்களை புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பச் செல்ல சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஆனால் அதில் முறையான ஏற்பாடுகள் இல்லாததால் பல தொழிலாளர்கள் நடைப்பயணமாக அல்லது சைக்கிள் தங்களது சொந்த ஊர் திரும்புகின்றனர். அப்படி திரும்பும் பாதி வழியிலேயே பீகாரைச் சேர்ந்த கார் மோதி உயிரிழ்ந்த சம்பவம் நடந்துள்ளது.

பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரன் பகுதி பழன்வாவைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் சாஹிர் அன்சாரி. இவர் தங்கள் மாவட்டத்தை சேர்ந்த 7 நண்பர்களுடன் தில்லியில் பணியாற்றி வந்துள்ளார். ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடிவெடுத்த இவர்கள், சைக்கிளில் மே 5-ஆம் தேதி பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

சுமார் 1,000 கி.மீ தூரத்தை சைக்கிள் மூலமாகவே அனைவரும் கடக்க முடிவெடுத்தனர். லக்னோ வரை பாதி தூரத்தை கடக்கவே அவர்களுக்கு 5 நாட்கள் ஆகியுள்ளது. மே 10-ஆம் தேதி காலை 10 மணியளவில் உணவு உண்பதற்காக சாலையின் தடுப்பில் அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது. இதில் அன்சாரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது, மற்றவர்கள் அருகில் இருந்த மரத்தில் தூக்கி எறியப்பட்டதால் ஓரளவு காயத்துடன் தப்பினர்.

காரில் இருந்து இறங்கிய ஓட்டுநர், இழப்பீடு பணம் கொடுப்பதாக கூறி பின்னர் மறுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த அன்சாரியை, நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

மோதிய கார் லக்னோவை சேர்ந்த பதிவு எண்ணை கொண்டதாகவும், அடையாளம் தெரியாத டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்த அன்சாரிக்கு, மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். இறந்த சாஹிர் அன்சாரியின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல ரூ. 14 ஆயிரம் ரூபாய் கேட்பதாக அவரது நண்பர் அன்சாரி கூறினார்.

Also Read: “புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பற்றி மோடி அரசு சிந்திக்கவில்லை”: சாகும் வரை உண்ணாவிரதம் -சமூக ஆர்வலர் கைது!