India

"கொரோனாவை காரணம் காட்டி தொழிலாளர்களை நசுக்குவதை ஏற்க முடியாது” - ராகுல் காந்தி ஆவேசம்!

கொரோனாவுக்கு எதிரான போரில் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் குரலை நசுக்குவதற்கு அனுமதிக்கமாட்டோம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாகவும், பா.ஜ.க அரசின் தோல்விகளாலும் பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் சில மாநிலங்கள் தொழிலாளர் சட்டங்களை சில காலத்திற்கு நிறுத்தி வைக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தொழிலாளர் சட்டங்களை நிறுத்தி வைப்பதாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு அறிவித்துள்ளது தொழிலாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “தொழிலாளர் சட்டங்கள் பல மாநிலங்களால் திருத்தப்படுகின்றன. கொரோனா தொற்றுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுகிறோம்.

ஆனால் மனித உரிமைகளை நசுக்குவதற்கும், பாதுகாப்பற்ற பணியிடங்களை அனுமதிப்பதற்கும், தொழிலாளர்களை சுரண்டுவதற்கும் அவர்களின் குரல்களை அடக்குவதற்கும் அனுமதிக்க முடியாது. தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அடிப்படைக் கொள்கைகளில் நாங்கள் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “கொரோனா வாட்டி வதைக்கும் நிலையிலும்கூட மாநில உரிமைகளை கபளீகரம் செய்வதா?” - கி.வீரமணி கண்டனம்!