India

“ஊரடங்குக்கு பிறகு 12 மணிநேரமாக உயரும் பணி நேரம்?” - உழைப்புச் சுரண்டலுக்கு காத்திருக்கும் முதலாளிகள்!

கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து தொழில் துறைகளும் முடங்கிக் கிடக்கின்றன. ஆகையால், மூன்றாம் கட்ட ஊரடங்கு அறிவித்த போது சிவப்பு மண்டலங்கள் அதாவது நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தவிர்த்து, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் சில தளர்வுகளை வழங்கியது மத்திய அரசு.

இதன் மூலம் அரசு நிறுவனங்கள், ஐ.டி உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களும் 33 சதவிகித ஊழியர்களுடன் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், ஊரடங்குக்குப் பிறகு தொழிற்சாலைகளை இயக்குவது தொடர்பாக நேற்று 12 தொழில்துறை அமைப்புகளின் பிரதிநிதிகள் மத்திய தொழில்துறை அமைச்சர் சந்தோஷுடன் காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டனர்.

அதில், ஊரடங்கால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் தொழிலாளர் சட்டத்தில் விலக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும், அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளுக்கு தொழிலாளர்களுக்கான பணிநேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாக உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொழிலாளர்களிடையே பெரும் இடியாய் விழுந்துள்ளது. ஏற்கெனவே முதலாளிகளின் உழைப்புச் சுரண்டலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பணிநேரம் 12 மணிநேரமாக நீட்டிக்கப்பட்டால் பல்வேறு இன்னல்களைச் சந்திக்க நேரிடும் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சி.பி.ஐ., சி.பி.ஐ.எம்., வி.சி.க. உள்ளிட்ட 7 கட்சிகள் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளன. கொரோனாவை காரணம் காட்டி தொழிலாளர்களை மேன்மேலும் அவதிக்குள்ளாக்கக் கூடாது என அதில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Also Read: உயர் அதிகாரிகளுக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் கொரோனா சிகிச்சை - மக்களுக்கு ஒரு நீதி, அதிகாரிகளுக்கு ஒரு நீதியா?