India

புதிய கல்வி கொள்கையின் இறுதி வரைவு தயார்: ஊரடங்கு நேரத்திலும் வர்ணாசிரமத்தை தூக்கிப்பிடிக்கும் மோடி அரசு!

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டலை அடுத்து கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு மத்திய அரசின் கல்விக் கொள்கை தொடர்பான ‘புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு - 2019’யை கடந்தாண்டு வெளியிட்டது.

இந்த கல்விக் கொள்கை வரைவு இந்தியை திணிக்கும் நோக்கத்தில் உள்ளதாகவும், ஏழை மாணவர்களின் கல்வியை பறிக்கும் செயலாக உள்ளது எனவும் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாம் மொழியாக இந்தி கட்டாயம் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து கட்டாயம் என்பது நீக்கப்பட்டு, விரும்பினால் பயிற்றுவிக்கலாம் என்று மாற்றப்பட்டது.

இந்த வரைவு அறிக்கை தொடர்பாக கடந்தாண்டு ஜூலை 31ம் தேதி வரை கருத்துகளை தெரிவிக்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அவகாசம் அளித்தது. இந்த வரைவு அறிக்கை குறித்து கருத்து கேட்பு கூட்டம் நாட்டில் பல இடங்களில் ரகசியமாக நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், நாடு முழுதும் சுமார் 2 லட்சம் பேர் தங்களது கருத்துக்களை அனுப்பி உள்ளனர். இதனையடுத்து மாநில கல்வி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. தி.மு.க நாடாளுமன்ற குழுவும் ஒரு அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்திருந்தது. இவற்றை எல்லாம் ஆய்வு செய்து தற்போது இறுதி வரைவு அறிக்கையை மத்திய அரசு தயாரித்துள்ளது.

நேற்று முன் தினம் பிரதமர் இறுதி அறிக்கை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். விரைவில் புதிய கல்விக் கொள்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் வாழ்வாதம் இன்றி பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். ஆனால் அதனைப்பற்றிக் கவலைப்படாத மோடி அரசு புதிய கல்விக் கொள்கையின் மூலம் குருகுல கல்வியை அமல்படுத்த முயற்சிக்கிறது. அரசின் இத்தகைய அனுகு முறைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

Also Read: அமெரிக்காவில் கியூப தூதரகத்தின் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் - ட்ரம்ப் வாய்மூடி மவுனம் காப்பது ஏன்?