India
“கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வைப் புகுத்துவது சமூக நீதிக்கு எதிரானது” : வைகோ ஆவேசம்!
நாட்டில் கல்வி மேம்பாடு தொடர்பாகவும், 2020-21ம் ஆண்டிற்கான கல்வி அட்டவணை - ஆன்லைன் கற்றலை ஊக்குவிப்பதற்கான வழிகளையும் பரிந்துரைக்க, யுஜிசி இந்த மாதத்தில் இரண்டு குழுக்களை அமைத்தது.
அதில் அரியானா மத்திய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆர்.சி.குஹாத் தலைமையிலான குழு, இளங்கலை மற்றும் முதுகலை அளவில் பொது நுழைவுத் தேர்வுகளை நடத்த பரிந்துரைத்துள்ளது.
ஆர்.சி.குஹாத்தின் பரிந்துரைக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக, கலை, அறிவியல் பட்டப் படிப்புகளில் சேரும் கிராமப்புற ஏழை, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை முடக்கிப் போடும் வகையில், நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்வது அநீதியாகும் என வைகோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரியானா மத்திய பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ஆர்.சி.குஹாத் தலைமையில், பல்கலைக் கழக மானியக் குழு (யூ.ஜி.சி), கொரோனா பேரிடரால் தள்ளி வைக்கப்பட்டுள்ள தேர்வுகளைத் தொடங்குவது குறித்தும், அடுத்த கல்வி ஆண்டிற்கான பாடங்களைத் தொடங்குவது குறித்தும் ஆராய்ந்து தனது பரிந்துரைகளை அளித்துள்ளது.
இக்குழு அளித்திருக்கும் பரிந்துரைகளில், மருத்துவப் படிப்புக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) போன்று, கலை அறிவியல் படிப்புகளுக்கும் தேசிய மற்றும் மாநில அளவில் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்பதும் இடம்பெற்று இருக்கிறது.
இதே கருத்தை, கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் முன்வைத்தபோது, நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தது. நானும் கண்டித்து அறிக்கை தந்தேன்.
கலை, அறிவியல் பட்டப் படிப்புகளில் சேரும் கிராமப்புற ஏழை, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை முடக்கிப் போடும் வகையில், நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்வது அநீதியாகும். இது கண்டனத்துக்கு உரியது.
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் பயிலும் வாய்ப்பற்ற பின்தங்கிய, பட்டியல் இனச் சமூக மாணவர்கள் மற்றும் அனைத்துச் சமூகங்களையும் சார்ந்த மாணவர்கள் கலை, அறிவியல் படிப்புகளைத்தான் நம்பி உள்ளனர்.
அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் நுழைவுத் தேர்வைப் புகுத்துவது சமூக நீதிக்கும் எதிரானது ஆகும். எனவே மத்திய பா.ஜ.க. அரசு, கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தச் செய்யப்பட்டு இருக்கும் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!