India

“மனிதநேயம் தான் பெரும் சொத்து” : துயரில் வாடும் ஏழைகளுக்கு சொத்தை விற்று உணவளிக்கும் இஸ்லாமிய சகோதரர்கள்!

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் தீவிரமாக அதிகரித்துள்ளது. இந்தக் கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு நாடுமுழுவதும் அமலில் உள்ளது.

இந்த ஊரடங்கால் இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். அரசின் நிவாரணம் போதாத நிலையில் ஏழை மக்கள் உணவின்றி பெரும் துயரங்களை சந்திக்கின்றனர்.

ஆனாலும் ஏழைகளின் துரயரங்களை உணர்ந்து பல தன்னார்வலர்கள், சமூக சேவை செய்வோர் மற்றும் அரசியல் கட்சி ஆங்காங்கே பல்வேறு உதவிகளை செய்துவருகின்றனர். அந்த வகையில் கர்நாடாக மாநிலத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்குவதற்காக தங்களது சொந்த நிலத்தை இஸ்லாமிய சகோதர்கள் விற்றுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க ஆளும் கர்நாடாக மாநிலத்தில் ஏழைமக்களுக்கும் தெருவோர மக்களுக்கும் அரசு போதிய நிவாரணம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் கோலார் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய சகோதர்கள் தாஜாமுல் பாஷா, முசாமில் பாஷா. சிறிய அளவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிம் இவர்கள் ஊரடங்கால் ஏழை, எளிய, தெருவோர மக்களுக்கு உணவு இல்லாமல் பரிதவிப்பதை கண்டு அவர்களுக்கு உணவு வழங்கமுடிவு செய்துள்ளனர்.

கையில் இருந்த பணத்தை வைத்து முடிந்தவரை உதவி செய்துவந்த சகோதரர்கள் பணம் தீர்ந்ததும் அவர்களுக்கு சொந்தமான இடத்தை ரூ. 25 லட்சத்துக்கு விற்று, ஏழைகளுக்கு உணவளித்து வருகின்றனர்.

இந்தப் பணத்தைக் கொண்டு மளிகைப் பொருட்கள் வாங்குவது, அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவது, ரேஷன் பொருட்கள் வாங்கி கொடுப்பது, வீட்டு வாசலில் உணவு கொண்டு போய் சேர்ப்பது என்று சேவை புரிந்து வருகின்றனர்.

இதுதொடர்பாக தஜாமுல் பாஷா பேசுகையில், “என்னுடைய ஐந்து வயது பெற்றோரை இழந்த நிலையில் பாட்டியுடன் கோலார் வந்தோம். பாட்டிதான் கவணித்துவந்தார். வறுமையால் 3ம் வகுப்போடு படிப்பை பாதியில் நிறுத்தினோம். அதன்பின், அங்குள்ள மசூதியில் வளர்க்கப்பட்டோம். ரியல் எஸ்டேட்அதன்பின், அங்குள்ள வாழை மண்டியில் வேலை பார்த்து வந்தேன். 30 வயதுக்குப் பிறகுதான், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடத் துவங்கினோம்.

கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் ஏழைகளுக்கு உணவு கிடைக்கவில்லை என்று அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் விபரீதங்கள் ஏற்படும். ஆதலால், அவர்களது வீட்டு வாசலுக்கே மாளிகைப் பொருட்கள், உணவு, அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறோம்.

நாங்கள் அனைதையாக இருந்தபோது அந்த இடத்தில் இருந்த இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் எங்களுக்கு உணவு கொடுத்து உதவினர். மதமும், ஜாதியும் இதற்கு ஒரு தடையாக இருக்கவில்லை. அப்போது கற்றுக்கொண்ட மனித நேயத்தை இப்போதும் தொடர்கின்றோம்.

மிகப் பெரிய அளவில் வசதி இல்லை என்றாலும், ஏழை, எளிய மக்கள் பசியால் வாடுவதை கண்டு, எங்களுக்கு சொந்தமான நிலத்தை விற்றோம். இதில் எந்த மத, அரசியல் நோக்கமும் இல்லை” எனத் தெரிவித்தார்.

இவர்களது சேவை மன்பபான்மையைப் பார்த்து பலரும் ஏழைக்களுக்கு உதவ முன் வந்துள்ளனர். இதுவரை இந்த சகோதர்கள் 12,000 பேர் கொண்ட 2,800 குடும்பங்களுக்கு உணவு மற்றும் இலவசமாக மளிகைப் பொருட்கள் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “இந்துவின் இறுதி ஊர்வலத்திற்கு வழி ஏற்பாடு செய்த இஸ்லாமியர்” : ஷாஹீன் பாக்கில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!