India

“ஈரானில் சிக்கியுள்ள இந்திய மீணவர்களை மீட்க நடவடிக்கையை விரைவு படுத்துக” - அரசுக்கு சுப்ரீம் கோர்ட் ஆணை!

தமிழக மீனவர்கள் உள்பட ஈரானின் தென்பகுதி தீவு ஒன்றில் சுமார் 1,000 இந்திய மீனவர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க வலியுறுத்தி நாகையைச் சேர்ந்த மீனவரின் மனைவி சாந்தா உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். கடந்த முறை விசாரணையின்போது மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மீனவர்கள் ஈரானின் தென் பகுதியில் எளிதாகச் சென்று சேர முடியாத இடத்தில் சிக்கி உள்ளனர். ஈரான் முழுதும் ஊரடங்கு தொடர்கிறது.

மீனவர்கள் தங்கியுள்ள பகுதிக்கு தற்போது யாரும் செல்ல முடியவில்லை. கடைசியாக மார்ச் 6 ஆம் தேதி வரை அவர்களுக்கு உணவு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது என்று சோலிசிட்டர் துஷார் மேத்தா கூறினார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மீனவர்கள் உணவு எதுவும் இல்லாமல் தவிப்பதாகவும், அவர்களை அழைத்துச் சென்ற நிறுவனம் கைவிட்டுவிட்டதாகவும் வாட்ஸ்-அப்பில் மீனவர்கள் தகவல் அனுப்பி உள்ளதாக நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இது உலக அளவிலான பிரச்னையாக உள்ளது. பல இடங்களில் சூழ்நிலை கைமீறிச் சென்றுள்ளது. மீனவர்களை மீட்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொள்ளும் நிலையில் அவர்கள் இருப்பதால் அனைத்து தகவல்களையும் ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு உடனடியாக அனுப்பிவைக்க வேண்டும்.

தூதரகம் அவர்களை தொடர்புகொண்டு அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும். அவர்களை மீட்பது தொடர்பான தொடர் நடவடிக்கைகளையும் விரைவு படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Also Read: “இந்தியாவில் பலருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா பரவுகிறது” - ICMR மூத்த விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்!