India

“850 கி.மீ சைக்கிளில் பயணித்தும் திருமணம் நடைபெறாத சோகம்” : உத்தர பிரதேசத்தில் மணமகன் வேதனை!

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சோனு குமார் சவுகான். இவர் பஞ்சாபில் லூதியானாவில் டைல்ஸ் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஏப்.18-ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அனைத்துப் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்த சோனு குமார், நண்பர்கள் மூன்று பேருடன் சைக்கிளில் செல்லத் திட்டமிட்டார்.

சுமார் 850 கி.மீ., பயணித்த அவர்கள் இன்னும் ஒரு 150 கி.மீ. பயணித்திருந்தால் சோனுவின் கிராமத்தை அடைந்திருக்க முடியும். அதற்கு முன்னதாக அவர்கள் சொந்த ஊர் செல்லும் வழியிலேயே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு பால்ராம்பூரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பலமுறை கோரிக்கை வைத்தும் காவல்துறையினர் மூன்று பேரையும் அனுமதிக்கவில்லை. இதனால் சோனு குமார் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார். மேலும், சோனுவும் அவரது நண்பர்களுக்கும் சோதனை முடிவுகள் 14 நாட்களில் வைரஸ் தொற்று இல்லையென்று வந்தால் அவர்கள் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சோனு, “ஊரடங்கால் எனது திருமணம் எளிமையாக நடக்கவிருந்தது. மிகுந்த பாதுகாப்போடுதான் சைக்களில் பயணித்தேன். இன்னுமொரு 150 கி.மீ. பயணித்திருந்தால் நான் வீட்டை அடைந்திருப்பேன். எனது திருமணம் நடந்திருக்கும். கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இருப்பினும், உடல்நலம் மிக முக்கியமானது, திருமணத்தை பின்னர் நடத்திக் கொள்ளலாம் எனக் கூறிவிட்டார்கள்" என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Also Read: ‘ஊரடங்கு காலத்தில் இந்த நடிகை செய்யும் வேலையைப் பாருங்க...’ : இணையத்தில் பரவும் வீடியோ!