India

“குடும்பத்தினரே அஞ்சும் நிலை; இந்துகளின் உடலை அடக்கம் செய்யும் இஸ்லாமியர்கள்” : கொரோனாவை வென்ற மனிதநேயம்!

உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் அதன் தாக்கம் தீவிரமாகியுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதனிடையே, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குக்கு குடும்பத்தினரே வராத நிலையில் இஸ்லாமியர்கள் சிலர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த இந்துக்களுக்கு அவர்கள் மதப்படி இறுதி சடங்கு செய்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல். இவர் கடந்த 30 ஆண்டுகளாக சாலையோரம் பிச்சை எடுப்பவர்கள் இறக்கும் போது, தற்கொலை செய்துக்கொண்டவர்கள் என குடும்பத்தினர் கேட்க வராமல் இருக்கும் உடல்களை சாதி, மதம் பார்க்காமல் அடக்கம் செய்யும் இறுதி சடங்கு பணியை செய்து வருகிறார்.

அதற்காக, ‘ஏக்தா’ என்ற அறக்கட்டளை தொடங்கி இந்த பணியை செய்து வருகிறார். இந்த பணியை செய்துவரும் இவர்களை குஜராத் அரசு பலமுறை பாராட்டியுள்ளது. பல உதவிகளையும் செய்துக்கொடுத்துள்ளனர். மேலும் ஒரு நாளைக்கு குறைந்தது 10 உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் அடக்கம் செய்யும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர். அந்த பணியையும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளபடி, அடக்கம் செய்பவர்கள் முகக்கவசம், கையுறை, உடலுக்கான பிரத்யேகமாக ஆடை ஆகியவற்றை அணிந்தும் கொண்டும்.

அதேப்போல், இறந்தவர்களின் உடல்களில் ரசாயனம் முழுமையாக தெளிக்கப்பட்டு, பிளாஸ்டிக் கொண்டு உடல்கள் சுற்றி அடக்கம் செய்து வருகின்றனர். உடல்களைக் கொண்டுச் செல்லும் வண்டிகளையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது பாதுகாப்பாக பணியாற்றுகின்றனர்.

இதுதொடர்பாக அப்துல் கூறுகையில், “இந்த வைரஸால் உயிரிழப்பவர்களின் உடலை குடும்பத்தினரிடம் கொடுக்க முடியாது அதனால் தாங்கள் தான் பாதுகாப்பாக அடக்கம் செய்யவேண்டும் என எங்களை சூரத் பேரூராட்சி அதிகாரிகள் கொண்டார்கள்.

நாங்களும் எதுவும் மறுக்காமல் இந்த பணியை ஒப்புக்கொண்டோம். அதன்படி அரசு அனுமதியோடு இந்த பணியை தற்போது செய்கிறோம். இறந்த உடலுக்கு மதம், சாதி கிடையாது. எங்களை பொருத்தவரை இந்த உடல் பாதுகாப்பாக அடக்கம் செய்யபடவேண்டும் என்பது மட்டும்தான்” எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பத்தினரே, நோய் தொற்று ஏற்படும் என அஞ்சி அருகில் செல்ல தயங்கும் நிலையில், இந்த சேவையை செய்து வரும் இஸ்லாமியர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

Also Read: “300 ஆண்டுகளாக இந்து கோயிலுக்கு சீர் செய்யும் இஸ்லாமியர்கள்”: மத நல்லிணக்கத்திற்கு சான்றாகும் ‘கிள்ளை’!