India
“கொரோனா காலத்திலும் தீண்டாமை கொடுமை” - பட்டியலினப் பெண் சமைத்த உணவை உண்ண மறுத்த நோயாளிகள்!
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நெருக்கடியை ஏற்படுத்தி வரும் நிலையிலும், உத்தர பிரதேசத்தின் லக்னோவில் சாதி பாகுபாடு பார்க்கும் நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவின் குஷி நகர் பகுதியில் உள்ள 5 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்துள்ளது. அவர்கள் அனைவரும் அக்கிராமத்தின் ஆரம்ப பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்களுக்காக, மாவட்ட நிர்வாகம் சார்பில் பெண் சமையலர் நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அந்த 5 பேரில் இருவர், நாள்தோறும் காலை மாலை என இரு வேளைகளிலும், தத்தம் வீடுகளுக்கேச் சென்று உணவு உட்கொண்டு வந்திருக்கின்றனர். இந்த நிகழ்வு இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்திருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்கப்பட்டதில், சமையலராக நியமிக்கப்பட்ட அந்தப் பெண் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் சமைத்த உணவை உண்ண தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மறுப்பு தெரிவித்ததோடு, அவர்களின் வீடுகளுக்கு நடந்தே சென்று சாப்பிட்டு விட்டு வந்திருக்கிறார்கள். இதனை அந்தப் பகுதியில் காவலுக்கு இருந்த போலிஸாரும் கண்டும் காணாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகாரளித்துள்ளனர் என ஊடகங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.
மேலும், சமையலராக நியமிக்கப்பட்ட லீலாவதியிடம் பேசிய போது, “மிகுந்த கவனத்துடன் கைகளில் க்ளவுஸ், மாஸ்க் என பாதுகாப்பாக சமையல் செய்து அவர்களிடத்தில் கொண்டு வைத்துவிட்டு திரும்பிவிடுவேன்.
மாவட்ட நிர்வாகம் கேட்டதன் காரணமாகவே இதை செய்தேன். ஆனால அவர்கள் நான் தயாரித்த உணவை உண்ண மறுத்துவிட்டனர். ஆகையால் இது தொடர்பாக அதிகாரிகளிடம் தகவலை தெரிவித்துவிட்டேன்” என்றிருக்கிறார்.
கொரோனா தொற்று காரணமாக மக்கள் நொடிப் பொழுதும் அச்சத்தோடு நாட்களை கழித்து வரும் வேளையில், இந்த இக்கட்டான சூழலிலும் கூட தீண்டாமையை முன்வைப்பது அதிர்ச்சியையும், அருவெறுப்பையுமே உண்டாக்குகிறது.
Also Read
-
நேபாளத்தில் திடீர் வெள்ளப் பெருக்கு! : 105 இந்தியர்கள் மாயமானதால் பரபரப்பு!
-
சுற்றி கிடக்கும் மதுபாட்டில்கள்.. அரசு மருத்துவமனையில் அவலம்! - வீடியோவால் அதிர்ச்சி!
-
ஆசிரியர்கள் தகுதித் தேர்வு விலக்கு தீர்மானம் : அரசின் உண்மை முகம் எது? - அன்பில் மகேஸ் கேள்வி!
-
கிரிக்கெட் விளையாடியபோது ... இளைஞருக்கு ஏற்பட்ட சோகம் : நடந்தது என்ன?
-
பரந்தூர் ரத்துக்குப் பின் இருக்கும் சதிகள் : தமிழ்நாட்டின் வளர்ச்சி மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக்!