P Chidambaram
India

“அடுத்த 2 வாரங்கள் மிகமுக்கியமான காலகட்டம்; பரவலான பரிசோதனை தேவை” - ப.சிதம்பரம் வலியுறுத்தல்! #COVID19 

கொரோனா கோரத் தாண்டவத்தின் பிடியில் முக்கியமான இரண்டு வார காலகட்டத்தில் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் உள்ளன என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. முதலிடத்தில் மகாராஷ்டிராவும், இரண்டாம் இடத்தில் தமிழ்நாடும் உள்ளன. இதுவரை 100க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளையும் இந்தியா சந்தித்துள்ளது. அதே சமயத்தில் 200க்கும் அதிகமானோர் குணமடைந்திருக்கிறார்கள்.

இருப்பினும் அறிகுறி இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பரவலான சோதனையை மேற்கொள்ளும் நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகள் ஈடுபடவேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள், முன்னாள் பிரதமர்கள், குடியரசுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கலந்தாலோசித்தது வரவேற்கத்தக்கது எனக் குறிப்பிட்டு ட்விட்டரில் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

மேலும், மிகவும் பரவலாக, வேகமாக, அவசரமாக கொரோனா பரிசோதனையை செய்ய வேண்டும். அதனை அரசு இன்றே தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதுபோக, தமிழ்நாடு முன்னுதாரணமாகத் திகழ்ந்து இந்த பரவலான பரிசோதனையை இன்றே தொடங்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, நேற்று பதிவிட்ட ட்வீட்டில், ஊரடங்கு உத்தரவோடு கூடுதலாக சோதனையும் செய்ய வேண்டும். அதுவே நல்ல விளைவுகளை கொடுக்கும். ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் செயல்பாடுகள் நமக்கு இதையே அறிவுறுத்துகின்றன என ப.சிதம்பரம் கூறியிருந்தார்.

Also Read: கொரோனா சிகிச்சை அளிக்க மருத்துவப் பணிக்கு திரும்பிய அயர்லாந்து பிரதமர்! #COVID19