India

“ஜி.டி.பி 2.5% மட்டுமே இருக்கும்” - கொரோனா தாக்கம், மோடி ஆட்சியால் பொருளாதார மதிப்பீட்டை குறைத்த மூடிஸ்!

மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததில் இருந்து கடுமையான பொருளாதாரச் சரிவைச் சந்தித்து வருகிறது இந்தியா. அதன் தொடர்ச்சியாக வங்கிகளும் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.

வங்கியில் கடன் வாங்கியவர்கள் திருப்பி அளிக்காமல் வெளிநாடுகளுக்கு தப்பியோடியதன் விளைவாக வங்கிகள் முடங்கும் அவல நிலை உருவாகியுள்ளது. நாளுக்கு நாள் பங்குச் சந்தைகளும் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துன் வருகின்றன.

இந்நிலையில், கொரோனா வைரஸ் உலகை மிகக் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலால் தொழில் நிறுவனங்கள் முடங்கி, பொருளாதாரம் மிகப்பெரும் அடியைச் சந்தித்துள்ளது.

இந்நிலையில், சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. 2020 காலண்டர் ஆண்டில் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி மதிப்பீட்டை 2.5% ஆகக் குறைத்துள்ளது மூடிஸ் நிறுவனம்.

முன்னதாக, நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சி 5.3% என்று மதிப்பிட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்குதலினால் உலகப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.

2020-21-க்கான உலகப் பொருளாதார பார்வையில் மூடிஸ் நிறுவனம் இந்தியாவில் வருவாய் இழப்பு கடுமையாக ஏற்படும் என்று கணித்துள்ளது. “இந்தியாவில் கடன் புழக்கம் பணப்புழக்கக் குறைபாடுகளினால் வங்கி மற்றும் வங்கியல்லாத நிதித்துறைகளில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.” என்று மூடிஸ் தெரிவித்துள்ளது.

கொரோனா காரணமாக செயல்படுத்தப்பட்ட ஊரடங்கு, வருவாய் இழப்புகளின் காரணமாக உலகம் முழுதுமே பொருளாதாரம் பெரிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதனால், அடுத்த சில மாதங்களில் வேலையிழப்புகள் அதிகரிக்கும்.” என மூடிஸ் நிறுவனம் கணித்துள்ளது.

Also Read: “வங்கிகளில் வாங்கிய எந்த கடனுக்கும் மூன்று மாதம் EMI கட்ட தேவையில்லை” : ரிசர்வ் வங்கி ஆளுநர் அதிரடி!