India

கொரோனா சிகிச்சை : தனிமை வார்டுகளாகும் இரயில் பெட்டிகள் - மத்திய அரசு முடிவு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால், நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அத்தியாவசிய தேவையைத் தவிர போக்குவரத்து உள்ளிட்ட மற்ற அனைத்து சேவைகளையும் ரத்து செய்துள்ளது மத்திய அரசு.

இந்நிலையில், கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை மேற்கொள்ள பல்வேறு வழிகளில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அவ்வகையில், அவசர கால சிகிச்சைக்காக ரயில் பெட்டிகளை பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுடன் ரயில்வே வாரியத்தலைவர், அனைத்து மண்டல, கோட்ட ரயில்வே பொது மேலாளர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

அப்போது, கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான புதிய வழியாக ரயில்வே அமைச்சகம் இதனை பரிந்துரைத்துள்ளது. மேலும், கொரோனா சிகிச்சைக்கான அத்தியாவசிய உபகரணங்களை உற்பத்தி செய்வது குறித்தும் ரயில்வே அமைச்சருடனான ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார், ஓய்வுபெற்ற மருத்துவர்கள், மத்திய படை பிரிவுகளில் உள்ள மருத்துவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

ஆனால், நாட்டில் உள்ள மருத்துவமனைகளை விடுத்து ரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாற்றும் அளவுக்கு அரசு முடிவெடுத்துள்ளது என்றால் இந்தியாவில் கொரோனாவின் நிலை சமூக பரவலை அடைந்துள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏனெனில், தமிழகத்தில் மதுரையைச் சேர்ந்த பெண்மணிக்கு கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என்றே தெரியவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: “வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களை இந்தியா கண்டறியவில்லை” : மோடி அரசு மீது கொரோனா ஆய்வுக் குழு அதிருப்தி!