India

லண்டன் சென்றுவந்த பாடகிக்கு கொரோனா பாதிப்பு - பார்ட்டியில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கானோர் அச்சம்!

பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவரோடு பார்ட்டியில் பங்கேற்ற பலரும் அச்சமடைந்துள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 223 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, வெளிநாடுகளுக்குச் சென்று வரும் பயணிகள் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றனர்.

இதற்கிடையே, லண்டன் சென்றிருந்த பாலிவுட் பாடகி கனிகா கபூர் லக்னோ விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு சோதனைக் குறைபாட்டைப் பயன்படுத்தி பரிசோதனைகளில் இருந்து தப்பியுள்ளார்.

அதோடு நில்லாமல், தான் லண்டன் சென்று வந்ததை மறைத்து நண்பர்களுக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் பார்ட்டி கொடுத்துள்ளார் கனிகா கபூர். அந்த பார்ட்டியில் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜெ, அவரது மகனும் பா.ஜ.க எம்.பியுமான துஷ்யந்த் சிங் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கனிகா கபூருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். மேலும், அவரோடு தொடர்பில் இருந்த நெருங்கிய நண்பர்கள் சிலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தவகல் வெளியாகியுள்ளது.

இதனால் அந்த பார்ட்டியில் கலந்துகொண்ட பிரபலங்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். வசுந்தரா ராஜெ, துஷ்யந்த் சிங் உள்ளிட்ட பலரும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

கனிகா கபூர் ஒரு அபார்ட்மென்ட்டில் குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். இதனால், அபார்ட்மென்டில் வசித்து வரும் பலருக்கும் கொரோனா தொற்று பரவி இருக்குமா என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அதனால் அந்த கட்டிடம் முழுவதையும் தனிமைபடுத்தவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, அந்த பார்ட்டியில் பங்கேற்ற பா.ஜ.க எம்.பி. துஷ்யந்த் சிங், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில எம்.பிக்களுக்கான சிறப்பு விருந்திலும் பங்கேற்றுள்ளார். இதனால், அந்நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மற்றவர்களின் வாழ்க்கையை இப்படி கேள்விக்குறியாக்கியுள்ள கனிகா கபூருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அரசின் பரிசோதனை முயற்சிகளின் தோல்வியையே இந்நிகழ்வு காட்டுவதாக பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.

Also Read: “கூலித் தொழிலாளர்கள் நிரம்பிய நாட்டில் work from home சாத்தியமா?” : மோடி உரையும் எழும் கேள்விகளும்!