India
“இந்த சூழலில் நான் இங்கேயே தங்கிக்கொள்கிறேன்” : சீனாவில் படிக்கும் இந்திய மாணவர் உருக்கம்! (Video)
கர்நாடக மாநிலம் துமகூரு பகுதியைச் சேர்ந்த ரிஸ்வான் பாஷா. இவரின் இரண்டாவது மகன் சாஹில் உசேன் மூன்று ஆண்டுகளாக சீனாவின் வான்லி மாகாணத்தில் உள்ள பல்கலைக் கழகத்தில் மருத்துவம் படித்து வருகிறார்.
இந்நிலையில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக நாடுமுழுவதும் உள்ள மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் பலரும் தங்களின் சொந்த ஊருக்குச் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் தங்கள் தாய் நாடுகளுக்கு திரும்பியுள்ளனர். ஆனால் சிலர் மட்டும் பல்கலைக்கழக விடுதியிலேயே தங்கியுள்ளனர். அதில் சாஹில் உசேனும் ஒருவர்.
சாஹில் உசேனும் நாடு திரும்பாததையடுத்து அவரது குடும்பத்தினர் மிகுந்த அச்சத்தில் இருந்தனர். மேலும் இந்தியாவிற்கு சாஹில் உசேனை அழைத்து வர தீவிரம் காட்டினர். ஆனால் அதனைக் கேட்க மறுத்த சாஹில் உசேன் தற்போது சீனாவில் இருந்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “நான் இப்போது நன்றாக இருக்கிறேன். எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. சீனாவில் இருந்து கர்நாடகாவுக்கு நேரடி விமானங்கள் இல்லை. மூன்று விமானங்கள் மாற வேண்டும்.
ஒருவேளை நான் அங்கு வந்தால் பயணத்தின் போது, எனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அதை என் நாட்டிற்கு பரப்பினால், அது ஒரு பிரச்னையாக இருக்கும். அது சரியானது அல்ல. எனவே, தற்போதைய சூழ்நிலையில் நான் இங்கேயே தங்கிக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த வீடியோவில், முகக்கவசம் அணிந்து தனது விடுதி அறையிலிருந்து வெளியே சென்று பல்கலைக்கழக வளாகத்தை சுற்றிக் காண்பித்தார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சீன அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைத்தார். அவரின் இந்த 14 நிமிட வீடியோவை பார்த்த பிறகு, பெற்றோர் தனது மகனின் முடிவை ஏற்றுக்கொண்டனர்.
அதுமட்டுமின்றி, சாஹில் உசேனின் இந்த முடிவை எண்ணி பெருமிதம் கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. சாஹில் உசேனுக்கு பலரும் தங்களின் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!