India

”அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான தாக்குதல்” - பா.ஜ.க அரசைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை!

சிறைவைக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்களை உடனே விடுவிக்கக் கோரி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370-யை கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கியது மத்திய பா.ஜ.க அரசு. இதன் பின்னர் காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் காஷ்மீர் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

அப்போது முதல் காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி ஆகியோர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்குமாறு பல்வேறு கட்சியினரும் கோரிக்கை விடுத்தும் பாசிச பா.ஜ.க அரசு செவிசாய்க்காமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. அதில் தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், லாலுபிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், முன்னாள் பா.ஜ.க அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

அந்தக் கூட்டறிக்கையில், “ஜனநாயக வேறுபாடுகள் வலுக்கட்டாயமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால் நசுக்கப்படுகின்றன. இது அரசியலமைப்பின் அடிப்படை கொள்கைகளான நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.

பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் முதல்வர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்களோ, தேச நலனுக்கு எதிரானவர்களோ அல்ல.

இந்த நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டம் உறுதி அளித்துள்ள உரிமைகள் மற்றும் காஷ்மீர் மக்களின் கண்ணியத்தின் மீதான தாக்குதல்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: "காஷ்மீர் முன்னாள் முதல்வர்களை கைது செய்வது பா.ஜ.கவின் பச்சை சுயநலமே!" - மு.க.ஸ்டாலின் கண்டனம்!