India

"ஈரானில் தவிக்கும் 900 இந்திய மீனவர்களை மீட்டுவர வேண்டும்” - வெளியுறவுத் துறை அமைச்சருக்கு வைகோ கோரிக்கை!

ஈரானில் சிக்கிய இந்திய மீனவர்களை மீட்க, வான்ஊர்தி அனுப்பவேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “900 இந்திய மீனவர்கள் ஈரான் நாட்டில் ஒதுங்கி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவர்களுள், 700 பேர் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

ஈரான் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு நேரடி வான் ஊர்திகள் இல்லை என்பதால், அவர்களை மீட்கும் பணி தாமதம் அடைந்துள்ளது. வளைகுடா நாடுகளின் வான் ஊர்திகள் தொடர்பும் இல்லை.

கொரோனா எனப்படும் கொவைட் 19 நோய்த்தொற்று, ஈரான் நாட்டிலும் பரவி இருப்பதால், அங்கே அன்றாட உணவுப் பொருள்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்திய மீனவர்களுக்கும் போதுமான உணவு கிடைக்கவில்லை. எனவே, அவர்கள் அச்சமும், பதற்றமும் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், அவர்களை உடனடியாக மீட்பதற்கு தனி வான் ஊர்தி அல்லது கப்பல் அனுப்பிட வேண்டும். சீனாவின் ஊஹான் மாநிலத்தில் சிக்கிய இந்தியர்களை, மிக விரைவாக மீட்டுக் கொண்டு வருவதற்கு, நமது அயல் உறவுத் துறை மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்கு உரியவை. அதுபோல, ஈரானில் சிக்கி இருக்கின்ற இந்திய மீனவர்களையும் மீட்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “அடுத்து சென்னைதானே?” - தமிழர்களைக் கொதிக்கச் செய்த CAA ஆதரவாளர்களின் பதாகை வாசகம்!