India

பா.ஜ.க அமைச்சர் மாலையிட்ட அம்பேத்கர் சிலையை கங்கை நீர் கொண்டு சுத்தப்படுத்திய RJS தொண்டர்கள்!

பீகாரில் பா.ஜ.க அமைச்சர் மரியாதை செலுத்திய பின் கங்கை நீர் கொண்டு அம்பேத்கர் சிலையை சுத்தம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக ஒரு பேரணியில் உரையாற்ற பெகுசராய் சென்ற மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், அங்குள்ள பூங்காவில் சட்டமேதை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

இந்நிலையில், நேற்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் சி.பி.ஐ-யைச் சேர்ந்தவர்கள் பா.ஜ.க அமைச்சர் கிரிராஜ் சிங் மாலையிட்ட அம்பேத்கரின் சிலையை கங்கை நீர் கொண்டு சுத்தப்படுத்தினர். அப்போது அவர்கள் அம்பேத்கர் மற்றும் பூலே ஆகியோரை புகழ்ந்து முழக்கமிட்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், “அமைச்சர் கிரிராஜ் சிங் ஒரு மனுவாத ஆதரவாளர். அம்பேத்கர் எதிர்த்து போராடிய எல்லாவற்றிற்கும் அவர் ஆதரவாக நிற்கிறார்.

அவர் இங்கு வந்து மக்களிடையே வகுப்புவாத கருத்துகளைப் பேசினார். எனவே, இன்று சகோதரத்துவத்தை புனித நீர் கொண்டு சுத்தப்படுத்தினோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

தலித் மக்கள் கோவில் அல்லது பொது இடத்திற்கு வந்து சென்றால் அவ்விடத்தை ஆதிக்க சாதியினர் கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்து வந்தனர். இந்நிலையில், பீகாரில் பா.ஜ.க அமைச்சர் மரியாதை செலுத்திய பின் கங்கை நீர் கொண்டு அம்பேத்கர் சிலையை சுத்தம் செய்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: படித்துக்கொண்டிருந்த மாணவர்களை தாக்கிய பா.ஜ.க குண்டர்கள் : ஜாமியா மாணவர்கள் வெளியிட்ட CCTV காட்சி !