India

“ஏர் இந்தியா தடுமாறியது எப்படி” : RTI தகவல் மூலம் மோடி அரசின் சதி அம்பலம்!

மத்திய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா சமீபகாலமாகக் கடுமையான இழப்பைச் சந்தித்து வருகிறது. அதே நேரம் இந்த இழப்பைக் காரணம் காட்டி, ஏர் இந்தியாவை ஒட்டுமொத்தமாக தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியையும் பா.ஜ.க அரசு மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக நஷ்டத்தைக் காரணம் காட்டி ஏர் இந்தியாவிடம் அரசு வசம் இருக்கும் 100 சதவீத பங்குகளையும் தனியாரிடமே கொடுத்துவிடுவது என்ற நிலைக்கு மோடி அரசாங்கம் சென்றுள்ளது.

இந்நிலையில், ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் லோகேஷ் பத்ரா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு வி.வி.ஐ.பி சிறப்பு விமானத்தால் எவ்வளவு தொகை மத்திய அரசின் சம்மந்தப்பட்ட அமைச்சகம் தரவேண்டும் என்பதை தேதி வாரியாகக் குறிப்பிட்டு மொத்தத் தொகை உள்ளிட்ட தகவல்களை வழங்கும்படி கேள்வி எழுப்பியிருந்தார்.

அவரது இந்த RTI கேள்விக்கு பதில் அளித்த ஏர் இந்தியா, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை ஏற்றிச் சென்ற வகையில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு, மத்திய அரசிடம் இருந்து ரூ.822 கோடி வர வேண்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியான ஆர்.டி.ஐ தகவலில், கடந்த ஆண்டு நவம்பர் 30ம் தேதி முதல் வி.வி.ஐ.பிக்கள் விமான பயணம் மேற்கொண்ட வகையில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.822 கோடி பாக்கி தொகை மத்திய அரசின் அமைச்சகத்திடம் இருந்து வரவேண்டியுள்ளது.

இது தவிர, வெளிநாட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை ஏற்றிவந்த வகையில் 12.65 கோடி ரூபாயும், ஆட்களை வேறு இடத்திற்கு வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட வகையில் 9.67 கோடி ரூபாயும் நிலுவையில் உள்ளது.

அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, போதுமான அளவு வி.வி.ஐ.பி விமானங்கள் இல்லாததால் அரசு அதிகாரிகள் பயணம் செய்ய விமான டிக்கெட் எடுத்துத் தந்த வகையில் 526.14 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இதில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 236.16 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

ஏர் இந்தியாவிற்கு மத்திய அரசு தரவேண்டிய தொகை மிகுந்த அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசே இவ்வளவு பெரிய தொகையை தராமல் நிலுவையில் வைத்திருக்கும்போது ஏர் இந்தியா நிறுவனத்தால் எப்படி லாபகரமாக செயல்படமுடியும்?

முன்னதாக, ஏர் இந்தியாவின் நஷ்டத்திற்கு வட்டி சுமை, குறைந்த விலையில் டிக்கெட் தரும் பிற நிறுவனங்கள், அடிக்கடி மாறும் இந்திய ரூபாய் மதிப்பு மற்றும் அதிகளவிலான செயல்பாட்டு கட்டணம் ஆகியவையே இந்த நஷ்டத்துக்கு காரணம். அதனால், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மொத்தம் ரூ.8,556.35 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் விளக்கம் அளித்திருந்தது.

Also Read: ‘ஏர் இந்தியாவை முழுவதும் தனியாருக்கு ஒப்படைக்க மோடி அரசு முடிவு’: அதிர்ச்சித் தகவல்!

ஆனால், தற்போது வெளிவந்துள்ள ஆர்.டி.ஐ தகவலைப் பார்க்கும்போது, போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை முற்றிலும் தவறான தகவல் என்றும், பொய்தகவலைக் கூறி மக்களை மோடி அரசாங்கம் ஏமாற்றிவந்ததும் அம்பலமாகியுள்ளது.

Also Read: வேலையிலேயே இல்லாத அதிகாரிக்கு 3 கோடி சம்பளம்: இப்படித்தான் ஏர் இந்தியா நஷ்டம் ஆச்சா ? - அதிர்ச்சி சம்பவம்